பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2013


ஐ.நாவுக்கு தகவல் வழங்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பது ஐ.நாவின் கடமை! நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டு
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கும் மக்களின் பாதுகாப்பை இலங்கையில் உறுதிப்படுத்துவது ஐக்கிய நாடுகளின் சபையினது தலையாய கடமையாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார்.
அரச சர்வதேச ரீதியில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று பிற்பகல் மனித உரிமைகள் பேரவைக் கட்டிடத்தின் 19ம் இலக்க குழு அறையில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போதே ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தொண்டர்களுக்கும் மனித உரிமைகள் தொடர்பான சாட்சியாளர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன் போது வலியுறுத்தினர்.
பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் பல விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசு அமுலாக்கம், மக்கள் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம் குறிப்பாக சாட்சிகளின் பாதுகாப்பு விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஆணையாளர், இவற்றினை அடிப்படையாகக் கொண்டே தனது இலங்கை விஜயமும் தீர்மானிக்கப்படுமென்று குறிப்பிட்டார்.
இலங்கையானது, ஏற்கனவே வழங்கிய உறுதிமொழிகளை முதலில் நிறைவேற்றி பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென்றும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.