அதன்படி போராட்டக்காரர்கள் தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தின் வள்ளுவர் கோட்டம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறைந்தது பத்தாயிரம் போர் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த முழக்கங்கள் ஒரு 10 நிமிடம் நீடித்தன.
பின்னர் 'மைக்' பிடித்த திமுக நிர்வாகி ஒருவர், "முக்கிய அறிவிப்பு... இங்கு கூடியிருக்கும் பத்தாயிரம் பேரில் தென் சென்னை மாவட்ட கழகத்தினர் (திமுக) முதலில் பொலிஸ் வாகனத்தில் ஏற வேண்டும். அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றப்பட்ட பின்னர் வடசென்னை மாவட்ட கழகத்தினரும் மற்றவர்களும் பொலிசார் வாகனத்தில் ஏற வேண்டும்'' என்று அறிவித்தார்.
அப்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக்கை பிடித்து ஒரு 'முக்கிய' அறிவிப்பை வெளியிட்டார். நண்பர்களே! இங்கு கூடியிருக்கும் நம்மை கைது செய்ய காவல்துறையிடம் போதுமான வாகனங்கள் இல்லை என்று பொலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இங்கே நிற்கும் எங்களை நீங்கள் கைது செய்யாவிட்டால் நாங்கள் அப்படியே இலங்கை தூதரகத்தை நோக்கி நடக்க வேண்டியதிருக்கும் என்று திடீர் என அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக முற்றுகைப் போராட்டம் நடத்துவர்கள் ஆகக் குறைந்தபட்சம் இலங்கை தூதரகம் நோக்கி சில அடிகளாவது நகர்வது வழக்கம். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான டெசோ அமைப்பினரோ வள்ளுவர் கோட்டம் அருகேதான் நாங்கள் நிற்போம். எங்களை இங்கேயே கைது செய்துவிடுங்கள்.. இல்லையெனில்தான் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக 'நகர்ந்து' செல்வோம் என்று கூறியது பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடைசியாக நடந்தது என்னவெனில் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று பொலிசார் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரையும் 'வள்ளுவர் கோட்டத்திலேயே' இருக்க சொல்லிவிட்டனர். வழக்கம் போல ஊடகங்களும் இலங்கை தூதரகத்தை மு.க. ஸ்டாலின் தலைமையில் முற்றுகையிட "சென்ற" பல்லாயிரக்கணக்கானோர் பொலிசாரால் 'தடுத்து' நிறுத்தி கைது செய்யப்பட்டு "திருமண மண்டபங்களில்" தங்க வைக்கப்பட்டனர். |