பக்கங்கள்

பக்கங்கள்

29 மே, 2013

ராஜிவ் கொலை வழக்கு: வெளியுறவுச் செயலாளருக்கு விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் ஜூன் 5ம் திகதிக்குள் வெளியுறவுச் செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ரோ அமைப்பு, சிபிஐ துணை இயக்குநரும் பதிலளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், நேற்று  புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.
மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்னும் சட்டத்தரணி இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். மறு விசாரணை நடத்தினால் தான், ராஜிவ் கொலைச் சம்பவத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும் என்று, சாந்த குமரேசன் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
ராஜிவ் படுகொலை தொடர்பான சில காணொளிகள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று, சிபிஐ முன்னாள் விசாரணை அதிகாரி ரகோத்தமன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய தகவல்கள் இந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மேலும், புல்லர் மற்றும் மகேந்திர தாஸ் மரண தண்டனை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், ராஜிவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் சாந்த குமரேசன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.