பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2013

ஈழத்தமிழர்களின் உரிமைக்காக புலம்பெயர் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை பெற்று கொடுக்க புலம்பெயர் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத் தளத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் சமாதான பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சிங்களவர்கள், முஸ்லிம் மற்றும் ஏனையோரின் ஜனநாயகம், பொருளாதார, சமூக வளர்ச்சியை மீளமைப்பதற்கான முனைப்புகளையும் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். காலம் கடந்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் இந்த போர்க்குற்றம் தொடர்பில் உன்னிப்பான பார்வையை செலுத்தி போர்க்குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்கும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை உள்நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய நம்பகமான செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில், சர்வதேச சமூகம், சர்வதேச விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
இலங்கையில் போர் முடிந்து நான்கு வருடங்களாகியும் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமத்தை அனுமதிக்க முடியாது.
இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு வலுவான செய்தியை வழங்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இலங்கையை கொண்டு வருவதற்கான தெளிவான செய்தியை அவர் அரசாங்கத்திற்கும் ஏனையவர்களுக்கு வழங்க வேண்டும்.
காணாமல் போகும் சம்பவங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும்.
மத தீவிரவாதம் அடக்கப்பட வேண்டும். ஊடக ம் மற்றும் நீதித்துறை என்பன சுயாதீனமாக இருக்க வேண்டும் என்றார்.
எரிக் சொல்ஹெய்ம் கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் நடு நிலையாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.