பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

 Hit Newsகாணாமற்போனோர் விடயத்தில் நவிப்பிள்ளை அதிக அக்கறை; உறவினர்கள் 300 பேருடன் கொழும்பில் நாளை விசேட சந்திப்பு 
காணாமற்போனோர் விவகாரத்தில் தனது அதிகூடிய கவனத்தைச் செலுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, காணாமற்போனோரின் உறவினர்கள் 300 பேருடன் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.

 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வடக்கு - கிழக்குக்கான பயணங்களின் போது காணாமற்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டங்கள், கையளிக்கப்பட்ட மனுக்கள் ஆகியவற்றை அடுத்து நாளை கொழும்பில் இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கான தனது பயணத்தின் போது 3 நாள்களை நவநீதம்பிள்ளை வடக்கு - கிழக்கில் செலவிட்டிருந்தார். இதன்போது காணாமற் போனோரின் உறவுகள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி நவநீதம்பிள்ளை செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து சென்று கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள். 
 
யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைவிட முல்லைத்தீவுக்குச் சென்ற ஆணையாளரை சூழ்ந்துகொண்ட மக்கள், தமது பிள்ளைகளை எப்படியாவது மீட்டுத் தரவேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர். 
 
அத்துடன் யாழ்ப்பாணத்தில் நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பின்போது காணாமற் போனோர் விவகாரம் தொடர்பில் மனு ஒன்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து இந்த விடயத்தில் தனது அதிக கவனத்தை செலுத்தியுள்ள நவநீதம்பிள்ளை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் காணாமற்போனோரின் உறவினர்கள் 300 பேருடன் விசேட சந்திப்பை நடத்தவுள்ளார் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=543592264730271851#sthash.9148It61.dpuf