பக்கங்கள்

பக்கங்கள்

1 நவ., 2013

இசைப்பிரியா வீடியோ உண்மையெனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

சென்னை: தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து கொன்றது தொடர்பான சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஆதாரம் உண்மையெனில் மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.  


இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறியிருந்தபோதிலும், அவர் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகளை சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், அவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டதற்கான ஆதாரத்தை சேனல் 4 இன்று காலை வெளியிட்டுள்ளது.  

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சருமான ஜெயந்தி நடராஜனிடம் இது குறித்து கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த அவர்," இசைப்பிரியா தொடர்பாக சேனல் 4 வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம் உண்மையெனில் மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.