பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

மன்னாரில் 16வது தடவையாக தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி: இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி மீண்டும் இன்று மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 16வது தடவையாக தோண்டப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணிவரை மனிதப் புதைகுழி தோண்டப்பட்டபோது, மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளன.
அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சுமார் 2 மீற்றர் வரை அகலப்படுத்தப்பட்டு தோண்டப்பட்டது.
இதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 4வது நாளாகவும் இன்று தமது விசாரணைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றுவரை 16 பெட்டிகளில் 18 எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் நாளை புதன்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த பணிகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.