பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2014

மட்டக்களப்பின் சில பகுதிகளில் வெள்ள அபாயம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தீவிரம்
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன்,
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக குளத்தின் வான் கதவுகள் அரை அடி திறக்கப்பட்டுள்ளன. இதேபோன்று மாதுறு ஓயா ஆறும் முந்தானை ஆறும் பெருக்கெடுத்துள்ளன.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி,கிரான், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகியவற்றின் சில பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
முந்தானையாறு வெள்ளம் கடலில் கலக்கும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு குறித்த பகுதிகளின் பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடம் என தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் அறிவிப்புகளை வழங்குவார்கள் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.