பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2014

அடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார். 

கொமன்வெல்த் நாளை முன்னிட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அபேயில், ஒரு மணிநேர பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.

இதில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத், கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மூத்த அரசியல்வாதிகள், உயர் ஆணையர்கள், கொமன்வெல்த் பிரதிநிதிகள், என சுமார் 200 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக, கொமன்வெல்த் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னர், கொமன்வெல்த் செயலகமான மல்பரோ ஹவுசில், மகாராணி மற்றும் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பிரதிநிதிகளுக்கு கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா விருந்தளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் அமைப்பின் வைர விழாவில் பங்கேற்க கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டனுக்குச் சென்றிருந்த போது, புலம்பெயர் தமிழர்கள் பெரும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது