பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2014

மற்றொரு உயர் அதிகாரியையும் சிறிலங்காவுக்கு அனுப்புகிறது அமெரிக்கா

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், மூன்றாவது தீர்மானம் கொண்டு வருவதற்குத் தயாராகி வரும் அமெரிக்கா, மற்றொரு மூத்த அதிகாரியை விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது. 

ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக, இந்த அமெரிக்க அதிகாரி கொழும்பு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நீதித் திணைக்களத்தின் மூத்த அதிகாரியே, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆறு வாரங்களுக்குள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராப், மற்றும், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச்செயலர் நிஷா பிஸ்வால் ஆகியோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்தவாரம், கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பெண்கள் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் கத்தரின் ரூசெல்லுக்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதால் அவரது பயணம் தடைப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நீதித் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விரைவில் சிறிலங்கா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.