பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014

பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்க ரஜினி முடிவு

பாராளுமன்றத் தெர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மிகவும் மெளனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார்
என்று தெரிய வந்துள்ளது.
ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூடங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்குத் தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கைகள் 1996 இல் நடந்தது. அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி. மு. க. - த. மா. கா. கூட்டணியை ஆதரித்தார். அந்தக் கூட்டணி உருவாக முக்கிய காரணமாகவும் இருந்தார். அந்த அணி அமோக வெற்றி பெற்று ரஜினியின் அரசியல் செல்வாக்கை வலுவாக பறைசாற்றியது. அதன் பிறகு 1998 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார். அப்போது அ. தி. மு க.வும் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்து நின்றன. அந்த சமயம் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது பாரதீய ஜனதாவுக்கு அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற வைத்தது. இதனால் 1999இல் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தார்.
2004ல் பா. ம. க. வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்பட்ட மோதல் அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்தது. கட்சி துவங்குவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது பா. ம. க. வை தோற்கடிக்க எதிர் அணியான பாரதிய ஜனதாவை வெற்றிபெற வைக்கும்படி குரல் கொடுத்தார். அதற்கு பிறகு கடந்த 10 வருடங்களாக எந்தக் கட்சிக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுங்கியே இருக்கிறார். இந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் நெருக்கமாகிவிட்டார் ஜெயலலிதா, கருணாநிதியை சந்தித்தார். எதிர் முகாமில் இருந்த பா. ம. க. தலைவர் டொக்டர் ராமதாஸ் அன்புமணி போன்றோருடனும் நெருக்கமானார். ரஜினி மகள் செளந்தர்யா திருமணத்துக்கு அன்புமணி நேரில் வந்து வாழ்த்தினார். இது போல் பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடியுடனும் நட்பு வைத்து இருக்கிறார். எல்லா தலைவர்களுடனும் இந்த நல்லுறவை நீடிக்க செய்வதே அவர் எண்ணமாக இருக்கிறது. எனவே வரும் தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.