பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2015

காங்கேசன்துறை துறைமுகம் திறக்கப்பட்டால் யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்;அர்ஜுண ரணதுங்க


news
காங்கேசன்துறை துறைமுகத்தை மக்கள் பாவனைக்கு விடுவித்தால் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களும் சிறுவர்களும்  போதைப்பொருள்  பாவனைக்கு அடிமையாவார்கள் என கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார்.

அதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
வளம் மிக்கதும் பெறுமதியான துறைமுகம் யாழ்ப்பாணத்தில் உள்ளது. எனினும் கடந்த 30 ஆண்டுகளாக பயன்பெறாது உள்ளது. 

எனினும் இந்தியாவுடன் இணைந்து நாம் துறைமுகத்தை புனரமைத்து செயற்படுத்தினால் அதிகவருவாயை ஈட்ட முடியும் . 
எனவே புதிய அரசு உருவாகியதுடன் 100 நாள் வேலைத்திட்டத்தையும் மைத்திரி அரசு அமூலப்படுத்தியுள்ளது.அத்துடன் வலி.வடக்கில் இராணுவத்தினருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் 1000 ஏக்கர் நிலப்பகுதியை விடுவிப்பதற்கு அரசு இணக்கம் கண்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த துறைமுகத்தை திறப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும்  பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளேன். 
மேலும் அரசின் 100 நாள் திட்டத்தில் துறைமுகம் விடுவிக்கப்படுவது என்பது சாத்தியமற்றது. ஏனெனில் நாங்கள் பிறந்த பிள்ளை போல இருக்கின்றோம். அரசு ஆரம்பித்து தற்போது ஒரு மாதம்.
இந்தநிலையில் கடந்த 30 வருட காலமாக இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாக மாற்ற முடியாது. இதனால் பிரச்சினைகள்  ஏற்படும். 

அத்துடன் குறித்த துறைமுகம் இந்தியாவிற்கு அயலில் உள்ளமையால் மக்கள் பாவனைக்கு விடப்படும் போது கஞ்சா , குடு மற்றும் தங்கம் கடத்தும் நடவடிக்கை ஊக்குவிக்கப்படும். இதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும் அதற்கு அடிமையாவார்கள் .
இரண்டு பிள்ளைகளின் தந்தை என்ற ரீதியில் கூறுகின்றேன். எனக்கு தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன பாகுபாடு இல்லை. அனைவரும் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.