பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2015

மூன்றாம் கட்ட மீள்குடியேற்ற காணிகள், நாளை பார்வையிடப்படும்


உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில், 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்ற, புதிய அரசின் அறிவித்தலுக்கமைய அவற்றின் மூன்றாம் கட்ட காணிகளை மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள்,நாளை சென்று பார்வையிடவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், இன்று தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
 
 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுக்கமைய வளலாய் மற்றும் வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அக் காணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பொதுமக்களிடம் கையளித்தார்.
 
இந்நிலையில் மிகுதிக் காணிகளினையும் விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அந்தக் காணிகளில் இருந்து வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
 
அதற்கமைய அந்தக் காணிகளை, நாளை  நேரில் சென்று பார்வையிடவுள்ளோம். எவ்வளவு காணிகள் மூன்றாம் கட்டமாக விடுவிக்கப்படும் என்ற உறுதியான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. 
 
மக்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் எவ்வளவு காணிகள் விடுவிக்கப்படும் என்பது தொடர்பான விபரங்கள் சரியான முறையில் வெளியிடப்படும் என்றார்.