பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2015

மட்டக்களப்பில் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் த.தே.கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின பேரணி, தடைகளைத் தாண்டி விடைகளைக் காண்போம் என்ற தொனிப்பொருளில் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இப்பேரணி, மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் ஆரம்பமாகி கல்முனை பிரதான வீதியூடாக கல்லடி உப்போடை துளசி மண்டபத்தை சென்றடைந்தது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வினை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான பாதுகாப்பின் மத்தியில் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு நடைபெற்றது.
அத்துடன் நிகழ்வு நடைபெறும் துளசி மண்டபத்தில் மோப்ப நாய்கள் சகிதம் பரிசோதனைகள் நடாத்தப்பட்டதுடன், மண்டபத்துக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதுவரையில் இலங்கையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்வுகளில் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்ட நிகழ்வாக இது கருதப்படுகின்றது.
அத்துடன், சில புலனாய்வுப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.