பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூலை, 2015

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூல வழக்கு 30–ந் தேதிக்கு ஒத்திவைப்பு


2–ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் சில முக்கிய நிறுவனங்களின்
நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இது தொடர்பான மூல வழக்கு விசாரணை சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அனைத்து சாட்சியங்களின் விசாரணையும் முடிந்த நிலையில் ஏப்ரல் 15–ந்தேதி இறுதி வாதம் தொடங்கியது. கடந்த 14–ந்தேதி சி.பி.ஐ. தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக கூடுதலாக சுமார் 90 ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், சி.பி.ஐ தாக்கல் செய்ய அனுமதி கோரும் அசலான ஆவணங்களை ஆய்வு செய்ய மேலும் அவகாசம் தேவை என்று கூறப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 17–ந் தேதிக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு ஆவணங்களை பார்வையிட ஏற்பாடு செய்யுமாறு சி.பி.ஐ. தரப்புக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் பிரதிகள் தாமதமாக வழங்கப்பட்டது. சிலருக்கு வழங்கப்படவே இல்லை. அதனால் பதில் மனுவை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி வழக்கின் விசாரணையை 30–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.