பக்கங்கள்

பக்கங்கள்

5 டிச., 2015

சம்பந்தனின் பதவியை பறிக்க கூட்டு எதிர்க்கட்சி மீளவும் முயற்சி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிப்பதற்கு, கூட்டு எதிர்க்கட்சி மீளவும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் மெய்யான எதிர்க்கட்சியல்ல என்பதனை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர் என மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக மீளவும் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் அறிவித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட எதிர்க்கட்சியின் முக்கிய பொறுப்புக்களை எமக்கு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சம்பந்தன் ஆளும் கட்சியின் சார்பில் வாக்களித்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் ஏனைய முக்கிய எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் கூட்டு எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.