பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு வவுனியா மாவட்டத்தில் வீடு

புங்குடுதீவுவில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்திற்கு
வவுனியா மாவட்டத்தில் வீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வித்தியாவின் குடும்பத்திற்கு அரச செலவில் வீடு வழங்குவதாக உறுதியளித்திருந்த போதும் இந்திய வீட்டுத்திட்டத்திலேயே அவர்களுக்கான வீட்டினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசா தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே மாதம் புங்குடுதீவில் பாடசாலைக்குச் சென்ற வித்தியா என்னும் மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூண்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச் சம்பவத்தினை அடுத்து யாழில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப்பரபரப்பான சூழ்நிலையில் மே மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு திடீரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்திருந்தார். இவ்விஜயத்தின் போது வடமாகாண ஆளநர் அலுவலகத்தில் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனைச் சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடியிருந்தார்.
வித்தியாவின் தாயார் மற்றும் சகோரனுக்கு ஆறதல் கூறிய ஜனாதிபதி தனது நிதியத்தில் இருந்து ஒரு தொகை பணத்தினையும் அவர்களுக்கு வழங்கிவைத்திருந்தார்.
இதன் போது வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரனால் புங்குடுதீவில் தொடர்ந்து வசித்து வருவதில் தமக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அவர்களுடைய குடும்பத்திற்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு வழங்கியிருந்தார்.
மேலும் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வித்தியாவின் குடும்பம் பாதுகாப்பாக வசிப்பதற்கு ஒரு வீட்டினையும் வழங்கிவைப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துச் சென்றிருந்தார்.
ஜனாதிபதி வித்தியாவின் குடும்பத்திற்கு வீடு வழங்குவதாக உறுதியளித்து 7 மாதங்கள் கடந்துவிட்டன. இதுவரை அவர்களுக்கான வீடு வழங்கிவைக்கப்படவில்லை. வித்தியாவின் குடும்பம் தற்போதும் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ள புங்குடுதீவில் உள்ள வீட்டிலேயே வசித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் வித்தியாவின் குடம்பத்திற்கான வீட்டினை வவுனியாவில் வழங்கி வைப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மிக விரைவில் அவர்களுக்கான வீடு கையளிக்கப்படும் என்று வடமாகாண ஆளநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் வீடு வழங்கிவைக்கப்படவுள்ள தகவல்கள் தொடர்பாக வித்தியாவின் குடம்பத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, யாழ்ப்பாணத்தில் எங்காவது வீட்டினை வழங்குமாறுதான் நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் யாழ்ப்பாணத்தில் அரசாங்க காணிகள் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் எமக்கான வீட்டினை வழங்குவதாக தெரிவித்திருக்கின்றார்கள். இவ்வாறு வவுனியாவில் வழங்கப்படவுள்ள வீடானது இந்திய வீட்டுத்திட்டத்தின் வீடே. இவ்விடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கிவைக்கப்படும் வீடாகும்.
எமது குடும்பமும் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டவர்கள்தான். எமக்கு இந்திய வீட்டுத்திட்டம் சாதாரணமாகவே கிடைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி இது தொடர்பாக எந்த அறிவிப்பினையும் வெளியிடாமல் நழுவியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.