பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2016

மத்திய அரசு மீது பாய்கிறார் விக்கி

வடக்கு மாகாண சபையைப் புறக்கணித்து 
தீர்மானங்கள் எடுப்பதற்குக் கடும் கண்டனம்

வடக்கு மாகாண சபையைப் புறக்கணித்து மக்கள் சார்பில் மத்திய அரசு தீர்மானங்கள் எடுப்பதை வன்மையாகக் கண்டிகின்றேன்.”
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“”மாகாண சபையினரைப் புறக்கணித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தமுடியாது. மாகாண சபையினருடைய ஒத்துழைப்புடனேயே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
“”அரசியல் மட்டத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை நிர்வாக மட்டத்தில் எடுப்பது மக்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
உதாரணமாக, அரச அலுவலர்கள் இராணுவத்துக்குப் பயந்து மக்களின் காணிகளை இராணுவத்துக்கு வழங்குவது மக்களைப் பாதிக்கின்றது. இராணுவத்துடன் அரச அலுவலர்கள் முரண்பட முடியாததால் இந்நிலைமை ஏற்படுகின்றது. இது தொடர்பில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அடிமட்ட மக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள மாகாண சபை உறுப்பினர்களே மக்களின் உண்மையான நிலைமைகளையும் தேவைகளையும் அறிந்தவர்கள். எனவே, மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் செவிசாய்த்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதிகார மையங்களாகிய மத்திய அரசும், மாகாண அரசும் இணைந்து மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மாகாண சபையினரைப் புறக்கணித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்த முடியாது. மாகாண சபையினருடைய ஒத்துழைப்புடனேயே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்