பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2016

கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்துகடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவி பகிரதி விடுதலை

விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவியாக செயற்பட்டவரென பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்
கீழ் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட பகிரதி முருகேசு அல்லது மீலர், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 02-03-2015 ஆம் திகதி பிரான்ஸுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு தனது 8 வயது மகளுடன் வந்திருந்த பகிரதி முருகேசு பயங்கரவாதத் தடைப்பரிவுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பொழுது தாயைப் பிரிய மறுத்த பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதியின் ஒரே மகளும் பயங்கரவாதத் தடைப் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சந்தேக நபரான பகிரதி முருகேசுவுக்கு எதிராக விசாரணையை நடத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிஸார் விசாரணையின் முதல் அறிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் சந்தேகநபரான பகிரதி முருகேசு 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ஆயுதப் பயிற்சிகள் பெற்ற பின்னர் 1996ஆம் ஆண்டு மகளிர் கடற்புலிகளின் தலைவியாகச் செயற்பட்டதாகவும் பின்னர் நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த சந்தேகநபரான பகிரதி முருகேசு இலங்கைக்கு வந்து மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த வேளையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாக முதல் அறிக்கையும்; மேலதிக விசாரணை அறிக்கைகளையும் தாக்கல் செய்தனர். சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில் 02-03-2015ஆம் திகதி கைது செய்யப்பட்ட பகிரதி முருகேசுவுக்கு எதிராக விசாரணைகளை நடத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிஸார் சந்தேகநபர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அறிக்கைகளை மட்டும் தாக்கல் செய்தனர். அறிக்கைகளை சான்றாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்ய முடியாது மேலும் மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் காணப்படின் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபரான பகிரதி முருகேசு விடுதலை செய்யப்படவேண்டும். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதி முருகேசுவின் ஒரே மகள் அவரது தாயார் கைது செய்யப்பட்டதிலிருந்து கடந்த 15 மாதங்களாக தனது பிறந்த நாட்டிற்கு செல்ல முடியாததினால் கல்வியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு சந்தேக நருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் உள்ளனவா என பயங்கரவாதத் தடைப் பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை இந்த நீதிமன்றிற்கு அறிவிக்க வேண்டும் என தனது வாதத்தை முன்வைத்தார். அந்தவேளையில்? சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு தெரிவிப்பதாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில் இன்று புதன்கிழமை இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப் பட்ட வேளையில் சட்டமா அதிபரினால் சந்தேகநபரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட முடிவின் பிரதியை பொலிசார் நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி அருணு ஆட்டிகல பகிரதி முருகேசுவை விடுதலை செய்தார். சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகளான செல்வராஜா துஷ்யந்தன், நளனி இலங்கோவன் அனுசரணையில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் முன்னிலையாகினர் என்பது குறிப்பிடத்தக்கது