பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2019

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக மண் ஏற்றிய லொறியை விடுவிப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பில் இருந்துவந்த இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினால் பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “குறித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்தபோது பொலிஸார் சுற்றிவளைத்தனர்.இதன்போது லொறியைக் கைவிட்டுவிட்டு லொறி உரிமையாளர் உட்பட மண் ஏற்றியவர்கள் தப்பியோடியதையடுத்து பொலிஸார் லொறியைக் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் லொறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து லொறியை மீட்பதற்கு முயற்சித்த போது அவர்களிடம் 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக தருமாறு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கோரியுள்ளார்.

இதனையடுத்து லொறி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று மாலை 5.35 மணியளவில் லொறி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினரால் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது