பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2021

பொத்துவில் முதல் பொலிகண்டிவரையான உணர்வெழுச்சிப் போராட்டத்தில் இணையும் யாழ்.பல்கலை மாணவர்கள்

www.pungudutivuswiss.com
வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று தொடக்கம் எதிர் வரும் 06.02.2021 வரை இடம்பெறவுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான தொடர் போராட்டத்திற்கு யாழ் பல்கலை மாணவர்கள் தமது பூரண ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

இதன் போது தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நாம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். தமிழராகிய நாம் இலங்கை தீவின் வடகிழக்கை ஒருங்கிணைந்த நிலப்பரப்பை தாயகமாக கொண்ட ஓர் தேசிய இனம்.

எங்கள் தலைவிதியை தீர்மனிக்கும் சகல உரிமையும் எமக்கு உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாகவும், எமது இனத்தின் மீது தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா அரசின் தொடர் அடக்குமுறைக்கும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராகவும் நாம் கிளர்ந்தெழ வேண்டிய வரலாற்றுக் கடமை எம் எல்லோருக்கும் உண்டு.

எமது அரசியல் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை தொடர்ச்சியாக மறுதலித்து வரும் ஸ்ரீலங்கா அரசானது இப்போராட்டத்தினை தடை செய்யும் நோக்குடன் நீதிமன்றங்களினனூடாக தடை உத்தரவினை வழங்கி எமது அடிப்படை உரிமையினை நசுக்க முயல்கின்றது.

இதனை தகர்த்தெறியும் விதமாக மக்கள் அனைவரும் அணியணியாக திரண்டு வந்து இப்போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

இதேவேளை தற்போதைய கொரோனா நோய்த் தொற்றினைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : #Poththuvil #Polikandi #Protest