பக்கங்கள்

பக்கங்கள்

2 நவ., 2013

கோத்தபாய ராஜபக்சவின் இந்திய பயணம் ரத்து.
இலங்கையில் நடைபெறஇருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பபுச் செயலர்  கோத்தபாய ராஜபக்ச தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த வாரம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழக சட்டப் பேரவையில் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த புதன்கிழமையன்று டில்லியில் கூடிய காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இந்தியா கலந்துகொள்ள முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இந்தியாவிலிருந்து ஒரு துரும்பு கூட கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என எச்சரித்தார்.
தமிழகத்தில் கொந்தளிப்பு கிளம்பியுள்ள இந்நிலையில் கோத்தபாயாவின் இந்திய பயணம் காங்கிரசுக்கு அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என கருதப்பட்டது.
இதை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச தனது இந்திய பயணத்தை ரத்து செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து டில்லி இலங்கை தூதரகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது, கோத்தபாய ராஜபக்சவின் இந்திய விஜயம் குறித்த தகவல் தம்மிடம் எதுவும் வரவில்லை எனக் கூறினர்.
இதற்கிடையே மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது தமிழக அரசியல் கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.