பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2014


சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, காஷ்யப் காலிறுதிக்கு தகுதி
சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். 

உலகின் 6ம் தரநிலை வீராங்கனையான சாய்னா, மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரநிலையில் மிகவும் பின்தங்கியுள்ள பிரான்ஸ் வீராங்கனை சாஷினா விக்னசை (தரநிலை-42) எதிர்கொண்டார். எந்த சவாலும் இல்லாமல் எளிதாக புள்ளிகளைக் குவித்த சாய்னா, 34 நிமிடங்களில் 21-7, 21-13 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சாஷினாவுடன் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் சாய்னா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் ஓபனில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் சாய்னா, காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் யிகான் வாங் (சீனா) என்பவரை எதிர்கொள்கிறார். இப்போட்டி சாய்னாவுக்கு கடும் சவாலாக இருக்கும். இவர்கள் இருவரும் இதுவரை மொத்தம் 7 முறை விளையாடியதில் 6ல் வாங் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து, கனடாவின் லி மிச்செலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் பருபள்ளி காஷ்யப், மலேசியாவின் பெலினோ ஜியானை வென்று காலிறுதியை உறுதி செய்தார். காலிறுதியில் தைபேயின் 6ம் தரநிலை வீரர் டியன் சென் சோயுவுடன் காஷ்யப் விளையாடுகிறார். மற்றொரு இந்திய வீரர் ஆனந்த் பவார், தனது 3ம் சுற்று ஆட்டத்தில் டியன் சென் சோயுவிடம் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.