பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2015

கிழக்கு மாகாணசபையில் சம்பந்தனின் ராஜதந்திரம் பலிக்கிறதா ?

கிழக்கில் ஆட்சியமைக்க சம்பந்தரை நாடிய பிள்ளையான் குழுவினர் - பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ்
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான், அக்கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும் கூட்டமைப்பிற்கு முதலமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாபஸ் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறு சந்தித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக் கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக குறித்த ஆறு பேரும் இன்று திருகோணமலையில் ஊடகவியலாளர் சந்திபோன்றை நடாத்தி தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, டப்ளியு.டி.எச் வீரசிங்க, ஜயந்த விஜேசேகர, டி.எம்.ஜயசேனவும் கட்சியை சேர்ந்த எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் தேசிய காங்கிரஸை சேர்ந்த எம்.எல்.எம். ஆமீர் லெப்பை ஆகியோரே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.