பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2015

மகிந்தவின் வீட்டுக்கு புறப்படுகிறது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை
ஆணைக்குழு அவரது வீட்டிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்தவின் தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்பியமைத் தொடர்பில் சுமார் பத்துக்கோடி ரூபா வரை சுயாதீன தொலைக்காட்சிக்கு செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்,பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேன நான்குகோடி நாற்பத்தாறு லட்சம் ரூபாவுக்கு விளம்பர ஒப்பந்தத்தை செய்து கொண்டிருந்தபோதும், மஹிந்த தரப்பின் தலையீடு காரணமாக அந்த விளம்பரங்கள் உரிய முறையில் ஒளிபரப்பப்படாமல் இருந்தமையினால், ஒரு கோடி எண்பது லட்சம் ரூபா அளவில் சுயாதீன தொலைக்காட்சி திருப்பிச் செலுத்த நேர்ந்துள்ளது.

இதன் மூலமாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுயாதீன தொலைக்காட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் மைத்திரிபால சிரிசேனவின் விளம்பரகட்டணங்களை விட பாதிக் கட்டணமே மஹிந்த ராஜபக்சவிடம் அறவிடப்பட்டுள்ளது.இவை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த நிலையில் குறித்த வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மிரிஹானையில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஸில் டி சில்வா தெரிவித்துள்ளார்