பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2015

5வது நாளாகவும் தொடர்கின்றது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!- இதுவரை 21 பேர் வைத்தியசாலைகளில் சேர்ப்பு


நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த கைதிகளில் 8 பேர் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த கைதிகளில் பதுளையைச் சேர்ந்த சசிகலா ராஜன் என்ற கைதி நேற்றுப் பகல் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மகஸின் சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 கைதிகளும், அநுராதபுரம் சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 கைதிகளும் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை வரை 21 கைதிகள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 196 பேரும் மிகுந்த சோர்வடைந்த நிலையிலும், தமது போராட்டத்தைத் திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.