பக்கங்கள்

பக்கங்கள்

8 ஆக., 2018

கருணாநிதிக்கு மெரீனாவில் இடம்.. உடைந்து கதறி அழுது நன்றி கூறிய ஸ்டாலின்

மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து முக ஸ்டாலின் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.இதனை கேட்ட கருணாநிதி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், தயாநிதமாறன் உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.ஸ்டாலின் துரைமுருகன் மார்பில் சாய்ந்தபடி கதறி அழுதார். அவரை துரைமுருகன், ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஆசுவாசப்படுத்தினர்.

பின்னர் கண்ணீர்விட்டபடி தொண்டர்களை பார்த்து கைக்கூப்பி வணங்கினார் ஸ்டாலின். தொண்டர்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியில் விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர்.

கருணாநிதி மறைந்த துக்கத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு பேரிடியாக இருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டிருப்பது பெருந்துயரத்திலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக உள்ளது