பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2018

திருகோணமலையில் இன்று மைத்திரி – சம்பந்தன் பேச்சு!


திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு காலையில் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்.

அங்கு அவரை எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வரவேற்பார்.

தமது குலதெய்வக் கோயிலான திருகோணமலை ஸ்ரீ ஆதிபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட வரவேற்பு மரியாதையை வழங்கும் சம்பந்தன், அதன் பின்னர் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுகளில் ஈடுபடுவார் எனத் தெரிகின்றது.

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம், ஐ.நா. தீர்மானம் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சம்பந்தனின் சொந்த இடமான திருகோணமலைக்கு இன்று வருகின்ற ஜனாதிபதியை அங்கு வரவேற்பதற்காக முற்கூட்டியே நேற்று மாலை கொழும்பிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு திருகோணமலையைச் சென்றடைந்தார் சம்பந்தன்.