ரவி கருணாநாயக்கவின் கருத்தால் சபையில் நேற்று பெரும் அமளிதுமளி, மூன்று தடவைகள் ஒத்திவைப்பு
சபாபீடத்திலிருந்து அஸ்வர் எம்.பி. விடுத்த உத்தரவு தவறென
உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம்
வெளிவிவகார அமைச்சின் குழுநிலை விவாதத்தில்உரையாற்றிக் கொண்டிருந்த ஐ.தே.க எம்.பி ரவி கருணாநாயக்க ‘திவி நெகும’ சம்பந்தமாக கருத்துக்களை முன்வைத்ததையடுத்து சபையில் எழுந்த சர்ச்சைகாரணமாக சபை நடவடிக்கைகள் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
‘திவி நெகும’ தொடர்பில் ரவி கரு ணாநாயக்க எம்.பி. கூறியவற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு அச்சமயம் சபாபீடத்திற்கு தலைமை தாங்கிய அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
கூச்சல் அதிகரிக்கவே சபா பீடத்துக்குக் கட்டுப்படாத குற்றத்திற்காக ஐ.தே.க. எம்.பி அஜித் பெரேராவை சபைக்குத் தலைமைதாங்கிய அஸ்வர் எம்.பி. மூன்று தடவைகள் எச்சரித்ததுடன் பின்னர் அவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவைப் பிறப்பித்துவிட்டு 10 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். அதன் பின்பு ஐ.தே.க. எம்.பிக்கள் சபையிலிருந்து வெளியேறினர்.
இதனையடுத்து 4.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 15 நிமிடங்களில் சபை கூடியது. ஐ.தே.க. எம்.பிக்கள் மீண்டும் சபைக்கு வருகை தந்தனர். அதன்போது தலைமைப் பீடத்திலிருந்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியிடம் ஒழுக்குப் பிரச்சி னையொன்றை முன்வைத்து ரவி கருணாநாயக்க எம்.பி சபையில் நடந்தவற்றைத் தெரிவித்து சபா பீடத்திலிருந்து அஸ்வர் எம்.பி வழங் கிய உத்தரவு ஏற்க முடியாது என வாதிட்டார். இதனை வலியுறுத்தி ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பியும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இச்சம்பவம் நடைபெற்றபோது தாம் சபையில் இல்லாதிருந்ததால் நடந் தது என்னவென்று வீடியோ மூலம் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம் என பிரதி சபாநாயகர் தெரிவித்தார். அதேவேளை, இது தொடர்பில் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சபாநாயகர் கலந்துரையாடி வருவதாகவும் அவர் உரிய தீர்மானம் எடுப்பார் எனவும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இதனையடுத்து மீண்டும் 10 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார். மீண்டும் சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு பிரதி சபாநாயகர் சபைக்குத் தலைமை தாங்கினார்.
இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க எழுந்து சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை எதிர்க்கட்சி பாராட்டுவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து இரண்டாவது தடவையாகவும் ரவி கருணாநாயக்க எம்.பி உரையாற்றினார்.
இதனையடுத்து ஆளும் கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன பிரதி சபாநாயகரின் அறிவிப்பு நிலையியல் கட்டளைக்கு முரணானது எனத் தெரிவித்தார். ஆளும் கட்சியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பலர் இதற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். கூச்சலைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில் சபாநாயகர் மூன்றாவது தடவையாகவும் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். (ஸ)