ஈழத்தமிழர்களின் துன்பங்களை நேரில் அறிந்து நவநீதம்பிள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: கலைஞர்
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கை செல்லவிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ஈழத் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டிய அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகள் பற்றிய கோரிக்கை மனுக்களை ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.
அதன்படி 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐநா துணைப் பொதுச் செயலாளர் யான் லியாசனிடமும், ஐநா மனித உரிமை தலைமை ஆணையர் நவீதம்பிள்ளையிடமும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் நேரில் அளித்து விவரங்களை எடுத்துரைத்தனர்.
அப்போது, இலங்கைக்கு சென்று நிலைமைகளை நேரிலேயே அறிந்து கொள்ளும்படி நவநீதம் பிள்ளையை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையமே 38 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை தயாரித்து, அதன் தலைவர் நவநீதம் பிள்ளை சமர்ப்பித்தார்.
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு செல்லும்போது வடக்கு மாகாணத்தில் தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள முறைகேடுகளை பற்றியும், தமிழர்களுக்கான நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை என்ற குறைபாடுகள் பற்றியும் நேரடியாக கண்டறிந்து இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை ஐநா அளவில் மேற்கொள்வார்கள் என்று உலகத் தமிழர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
திமுக சார்பில் கேட்டுக்கொண்டதற்கிணங்க இலங்கை செல்லும் நவநீதம் பிள்ளை, ஈழத்தமிழர்களின் துன்பங்களையெல்லாம் நேரில் அறிந்து ஐநா மன்றத்தின் முன்பு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.