கிளிநொச்சியில் கட்டாய கருத்தடையால் இளம்பெண் ஒருவர் மரணம்
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயாரான அவர் பலவீனமானவுடல் நிலையில் இருப்பதாகவும் அடுத்த கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக்கூறியே கட்டாயப்படுத்தி இந்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தடுப்பூசி போடப்பட்டவேளையில் இந்த
இளம் தாயான 26 வயதுடைய சதீஸ்குமார் மஞ்சுளா இருமாத காலம் கருத்தரித்த நிலையில் இருந்ததாகவும் அதையும் மீறி இந்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த நிலையில் அவரதுடல் நிலை மோசமடையத் தொடங்கியதனால் பின்னர் அதற்கு மாற்றீடான தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து உடல் பாதிப்பிற்குள்ளாகி கோமா நிலைக்கு சென்ற வேளை கடந்த 24ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இந்தப் பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 4 நாடகளாக சிகிச்சைபெற்றிருந்த அவர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று மரணமானார்.
இதனிடையே அவ்வாறு கர்ப்பத்தடையூசி போடப்பட்ட பலபெண்கள் போதிய கவனிப்பு இன்மை மற்றும் நோய் தொற்றுக்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.