மக்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும் -முரளி
பல்வகைமை மற்றும் சமத்துவத்தினால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை தேசியத்தை கட்டியெழுப்புவதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய ஒருமைபாட்டுக்கான மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே முத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முரண்பாடுகளினால் நானும் பாதிக்கப்பட்டேன். ஆனால் அவற்றை தற்போது கூற முடியாது. நாட்டில் சிங்களவர்கள் தமிழர்கள் என இருபாலரும் தவறுகளை செய்துள்ளனர். அவற்றை தற்போது கதைப்பதால் எவ்வித பயனும் இல்லை.
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறவில்லை. இவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை, உணவு மற்றும் கல்வி எனபல அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அப்போதே ஒற்றுமையினால் நிறைந்த இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியும்.
அரசாங்கம் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகின்றது. ஆனால் அரசாங்கத்தால் மாத்திரம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. தனியார் நிறுவனங்கள் மற்றும் இசை கலைஞர்கள் எம்மை போன்ற விளையாட்டு வீரர்கள் என பலராலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார்.