திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி 2006ல் கலசபாக்கம் ஒன்றிய குழுதலைவராக இருக்கும் போதிலிருந்தே அவர் மீது அதிகாரிகளை ஒருமையில் பேசுவது, திட்டுவது கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி திமுக பிரபலங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு சம்பாதிக்கிறார் என உட்கட்சியினர் அனுப்பிய புகார் கடிதங்களை தனது மேலிட செல்வாக்கை பயன்படுத்தி அவைகளை ஒதுக்க வைத்தார்
2011 தேர்தலில் மீண்டும் அதே கலசபாக்கம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வாகி அமைச்சரானார். 8 மாதத்தில் ராவணனுடன் நெருக்கமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் பதவி, கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் 2014 எம்.பி தேர்தலுக்கு பின்னர்தான் மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. வேளாண்மை துறையில் அதிகளவில் ஊழல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் வேளாண்மை அதிகாரி தற்கொலை செய்துக்கொண்டார். அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது கட்சிக்கு அவமானம் என கருதுவதோடு, கட்சியின் வரலாற்று கரையாகிப்போன இந்த விவகாரத்தில் அவருக்கும் கட்சிக்கும் இனிமேல் எந்த சம்மந்தமும் இல்லை எனக்காட்ட அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யவைக்க “கார்டன்“ முடிவு செய்துள்ளதாக கட்சியினர் தகவல் பரப்புகின்றனர்.
அது உண்மையாக இருந்தால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் நிலை இன்னும் கஸ்டமாகிவிடும் என புலம்புகின்றனர் அவருக்கு வேண்டப்பட்டவர்கள்.