சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும்,
கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் மீனா லோகுவின் அதிரடிகளைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது அறிவாலயம். தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நிர்வாகிகள் பலரும், தேர்தல் தோல்விக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போனார்கள். கூட்டத்தில் பேசிய மீனா லோகு, " வேட்பாளராக கட்சி என்னை அறிவித்ததும் மாவட்ட செயலாளர் வீரகோபாலைப் போய்ப் பார்த்தேன். அவர் எடுத்த எடுப்பிலேயே, 'மாவட்ட செயலாளர் தேர்தல்ல எனக்கு எதிராக நீங்க நின்னீங்க. ஒன்றரை கோடி கொடுத்துத்தான் ஜெயிக்க முடிஞ்சது'ன்னு அதிருப்தியாக பேசினார்.
முன்னதாக, கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்திக்க சென்றிருக்கிறார் மீனா லோகு. அங்கு இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன், 'தேர்தல் முடிவு வெளியாகும்போது பல ரவுண்டுகளில் நீங்கள்தான் முதலிடத்தில் இருந்தீர்கள். நீங்கள் தோற்பீர்கள் என நினைக்கவில்லை. தலைவரிடம் பேசும்போது அழுதுவிட வேண்டாம்' எனச் சொல்லி அனுப்பியிருக்கிறார். உள்ளே கலைஞரைப் பார்த்ததும் கதறி அழுதுவிட்டார் மீனா லோகு. அவர் அழுததைப் பார்த்து கருணாநிதியும் அழுதுவிட்டார்.
சில நிமிட மவுனத்திற்குப் பிறகு, 'நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய் என நம்பினேன். வடக்குத் தொகுதியில் நீ நல்ல ஓட்டுக்களை வாங்கிக் கொண்டே இருந்தாய். எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம்' எனத் தேற்றியிருக்கிறார். இருவரும் மாறி மாறி அழுது கொண்டிருந்த சம்பவத்தால் அதிர்ந்து போனது கோபாலபுரம். இதையடுத்து, செயற்குழு கூட்டத்திலும் மீனாவின் அதிரடிகளைப் பார்த்து அரண்டு போயிருக்கிறார்கள் கோவை மாவட்ட நிர்வாகிகள்.
தேர்தலில் கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் பட்டியலை தீவிரமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்.