மகாராஷ்டிராவில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் முற்போக்குவாதி நரேந்திர தபோல்கரும், கடந்த மாதம் கோல்காபூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கோவிந்த பன்சாரேவும் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இரண்டு சம்பவங்களும் காலையில் நடைப் பயிற்சி செய்த போது நடைபெற்றுள்ளன.
எனவே இவற்றை ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் தான் செய்திருக்கக் கூடும் என்று போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் கல்வித்துறை அமைச்சருமான ஜிதேந்திர அவ்காத் சில நாட்களுக்கு முன்பு கோட்சேயை விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதனையடுத்து தற்போது அவருக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரில், "கோட்சே விடுதலைப் படை என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று எனக்கு வந்துள்ளது. அதில் கோட்சேவுக்கு எதிராக பேசினால், தபோல்கர், பன்சாரேவை போல உன்னையும் சுட்டுத் தள்ளுவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
கவரில் ஒட்டப்பட்ட அஞ்சல் தலையைக் கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் நவி மும்பையில் உள்ள அயிரோலி என்ற இடத்தில் இருந்துதான் அந்தக் கடிதம் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நவ்பாதா காவல் நிலைய அதிகாரி பகாரே தெரிவித்துள்ளார்.