நண்பனைக் காப்பாற்றச் சென்று தனது உயிரை நீத்த “இளம் வீரன்” முரளிதரன் பிருந்தனுக்குத் தேசிய விருது
உயிரையும், தங்களது இழப்புகளையும்பொருட்படுத்தாது மற்றவர்களைக் காத்தற்பொருட்டு துணிச்சலுடன் அருஞ் செயல்களையும் , தியாகங்களையும் கனடிய மண்ணில்
புரிந்தவர்களைக் கௌரவிக்கும் 40 ஆவது வருட தேசிய நிகழ்வு கனடிய ஆளுநர் டேவிட் ஜோன்சனின் ஒட்டாவோ ”றிடோ” வாசஸ்தலத்தில் கடந்த வாரம் இடம்பெற்றது.
விழாவில் முதலாவாதாகக் கௌரவிக்கபட்டு விருது வழங்கப்பட்டவர்களில் காலம் சென்ற ”இளம் வீரன்” பிருந்தன் முதன்மையாக இருந்தார். பிருந்தனது தந்தையான நடராஜா முரளிதரனும் , தாயாரான சத்தியசிறியும் (றஞ்சி) நிகழ்வில் பங்குபற்றி பிருந்தன் சார்பில் விருதினைப் பெற்றுக் கொண்டார்கள்.
இவ்வாறான அதியுயர் விருதொன்றை தமிழர் ஒருவர் வெளிநாடொன்றில் பெறுவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். விருது கொடுக்கப்பட்ட வேளையில் எடுக்கப்பட்ட படங்கள் கனடிய ஆளுநரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.