காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது தடுத்தனர் இலங்கை அரச பிரதிநிதிகள்!
உறவினர்கள் தங்கள் உறவுகளை மீட்டுத் தடுமாறு கோரி கதறியழுதனர்.
நவநீதம்பிள்ளையைச் சந்திக்க விடாது தடுக்கப்பட்டதுடன் அவரை பின் வாசல் வழியால் கொண்டு சென்றனர் அரச பிரதிநிதிகள்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அங்கு பல்வேறு சந்திப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.
இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், காணாமல் போனோரின் சங்கத்தினர் தங்களுடைய உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வாசிகசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோர் சங்கத்தினரும் பங்கேற்றனர்.
இதில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், தமிழ்த் தேசிய முன்னணியின் ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
பொது நூலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிற்காக முன்வழியாக வருகை தந்த ஆணையாளர் நவனீதம்பிள்ளை சந்திப்புகளை முடித்துக் கொண்டு பொது நூலகத்தின் பின்வழியாக சென்றுவிட்டார்.
இவரை பின்கதவால் கூட்டிச் சென்றவர்கள் அரச பிரதிநிதிகள் எனத் தெரியவருகின்றது.