ஐ.நா முன்றலில் பெருந்திரளான மக்களுடன் மாபெரும் கவனயீர்ப்பு
ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும் என்னும் தலைவர் பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு இணங்க பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா முன்றலில் இன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றனர்.
அண்மையில் ஜெனீவா முன்றலில் தன்னுடலை தீக்கிரையாக்கிய ஈகைபேரொளி செந்தில்குமரனது நிழற்படத்திற்கு மலர்மாலை சூட்டி அகவணக்கம் செலுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
சுமார் 2:30 மணியளவில் ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பூங்காவில் இருந்து பெருந்திரளான மக்களுடன் ஆரம்பித்த இம் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
ஐ.நாவின் கவனத்தை ஈர்க்கும்வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இம்மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரான்ஸ் கஜன் அவர்கள், 1956 தொடக்கம் இன்றுவரை இலங்கையில் தமிழினத்துக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அநீதிகளை புகைப்படமாக்கி கண்காட்சியாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.
வழமைக்கு மாறாக ஐ.நா முன்றலில் பாதுகாப்புக் கருதி அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சுவிஸ் இளையோர் அமைப்பினரைச் சார்ந்தோரும் இன்னும் பல அமைப்பினரும் ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளரின் அலுவலக அதிகாரிகளுடன் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தியதாகவும் தெரியவரும் இந்நிலையில் அங்கு அவர்கள் எது தொடர்பில் பேசினார்கள் என்பது இதுவரையில் எமக்கு கிடைக்கவில்லை.
ஐரோப்பிய நேரம் 5:30 மணிக்கு நிறைவுக்கு வந்த இம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கோபி சிவந்தன் தலைமையில் மேலும் இருவர் பெல்ஜியம் நோக்கி மிதிவண்டிப் பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர். இவர்களது மிதிவண்டிப் பயணத்திற்கு நகராட்சி மன்றங்கள் ஆதரவளித்து வருவதாகவும், எனவே தமிழ் மக்களையும் அவர்களுக்கான ஆதரவினை வழங்குமாறும் சிவந்தன் கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.