யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தின விழாவும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு சி. கிருபாகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண கல்வியமைச்சர் த. குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் தி. ஜோன்குயின்ரஸ், வேலணை பிரதேச சபை தவிசாளர் சி. சிவராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் கலைமாடம் திறந்து வைத்தல், புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திரை நீக்கம் மற்றும் கல்லூரியின் காரண கர்த்தாக்களான அமரர்களான சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா, சேர் வை துரைச்சாமி, பண்டிதர் இ. மருதையினார் ஆகியோரின் உருவப்படங்கள் திரை நீக்கம் என்பனவும் இடம்பெற்றன.
இதில் மாணவர்களுக்கு அரிய பல கருத்துக்களை கூறிய முதலமைச்சர் வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம் தான் எனவும் குறிப்பிட்டார்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தீவக கல்வி வலய அலுவலர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், தீவக கல்விச் சமூகத்தினர் எனப் பலதரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.