டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துடுப்பாட்டக்காரர் கெவின் பீட்டர்சன், சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் கோப்பை கைப்பற்றும் என்று ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது நடைபெற்று வருகின்ற 6வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
அந்த அணி சிறந்த அணித்தலைவர் டோனியை பெற்றுள்ளது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும் சென்னை அணியில் உள்ளனர். பந்துகள் நன்கு திரும்பக்கூடிய சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ஆடுகளம் இந்த வீரர்களுக்கு சாதகமாக இருக்கின்றது.
மேலும் சென்னை அணியின் சூப்பர் ஸ்டாராக மைக் ஹஸ்சி திகழ்கிறார். எனவே இந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று பந்தயம் கட்டுவேன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆட்டம் இந்த ஆண்டு ஏமாற்றம் அளிக்கிறது.
சென்னை மற்றும் ஈடன் கார்டன் ஆடுகளங்கள் ஒரே மாதிரியானவை. ஆனால் கொல்கத்தா அணியில் திறமையான பல வீரர்கள் இருந்தும் புள்ளி பட்டியலில் முன்னேறவில்லை. இந்த ஆண்டு டெல்லி அணிக்கு மோசமாக தொடக்கமாக அமைந்துள்ளது. ஜெஸ்சி ரைடரும், நானும் இந்த தொடர் முழுவதும் இடம்பெறவில்லை.
காயம் குணமடைந்த ஷேவாக் தற்போது விளையாடி வருகிறார். டெல்லி சில வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தாலும் சரியான நேரத்தில் அணி எழுச்சி பெறும். ரிக்கி பொண்டிங் போன்ற மூத்த வீரர்களுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவது கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
|