சம்பூர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக, மனித உரிமை மீறல் தொடர்பில் விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்ள இலங்கை ஒரு வலுவான சட்ட கட்டமைப்பை அமுல்படுத்துவது அவசியமென ஐ.நா. நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒன்பது நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் சுயாதீன நிபுணர் ஜூவான் பப்லோ, தனது விஜயத்தின் இறுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களை சந்தித்தார். அதன்போது, இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவத்தை மனித உரிமை விடயத்திற்கு கொடுக்கவில்லை. மனித உரிமை விடயங்களை மதிப்பீடு செய்வதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை நிரூபிக்கவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், உட்கட்டமைப்பு வசதிகளைவிட பொருளாதார சீர்திருத்த கொள்கைகள், மனித உரிமை விடயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பவற்றை இலங்கை அரசாங்கம் மதிப்பீடு செய்து உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.