ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்-பி.பி.சி
இலங்கையில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்
சமர்ப்பிப்பது அவசியமென இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டம் மற்றும் சொத்துகள் மற்றும் உடமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை அளிப்பதென்பது அவசியம் என கொழும்பில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே சொத்து விவர அறிக்கை ஒன்றை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்தாலும், கடந்த காலங்களில் இந்த முறைமை கடைப்பிடிக்கப்படவோ, வலியுறுத்தப்படவோ இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு வேட்பாளர் தனது சொத்து விவரங்களை தெரிவிக்க மறுத்தால் அது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என்றும், அப்படி விவரம் அளிக்க மறுக்கும் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்ய பொதுமக்களுக்கு முகாந்திரம் உள்ளது என்றும் பத்திரன குறிப்பிட்டார்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை அளிக்கிறார்களா என்பதை தாங்கள் அவதானிக்கப் போவதாகவும், அப்படி அளிக்கத் தவறுகிற பட்சத்தில் தேர்தல் ஆணையாளரும் பொலிஸ் மா அதிபரும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் தவறுகிற பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதென அஜித் பத்திரன கூறினார்.