புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2013

பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலை போராட்டமும்!- ச. வி. கிருபாகரன

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா தலைகீழாய் நில்லடா” என்ற மாற்றி எழுதுமளவிற்கு, ஈழத்தமிழரது நிலை காணப்படுகிறது.

ஈழத்தமிழரது மக்கள் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் விடயத்தை ஆரம்பிப்பது நல்லது என நம்புகிறேன்.
முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடந்து முடிந்து சரியாக 11 மாதங்களில், அதாவது 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிறிலங்காவின் 14வது பாராளுமன்றத்திற்கான தேர்தலில், தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் 13 உறுப்பினர்களே வெற்றிபெற்றனர்.
தேசியப்பட்டியலில் ஒருவர் உட்பட, எல்லாமாக 14 பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டிருந்தது. அம்பாறையில் பொடிஅப்புகாமியின் குத்துக்கரணத்துடன், தற்பொழுது 13 பாராளுமன்ற உறுப்பினர்களையே தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ளது.
ஆனால், 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், வடக்கு கிழக்கில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 20 உறுப்பினர்கள் வெற்றி பெற்றதுடன், தேசியப்பட்டியலில் இருவர் உட்பட, எல்லாமாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
இதில், 2004ம் ஆண்டு தேர்தலின் போது, யாழ் மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, 2010ம் ஆண்டு ஏப்ரல் தேர்தலில், 5 உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்த நான்கு உறுப்பினர்களையும், இரு சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் கூட்டணியான, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவை வெற்றிகொண்டன. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மாவட்டங்களிலும் இதே நிலை.
அப்படியானால் 2010ம் ஆண்டு தேர்தலில்  தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில்  தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான வாக்குகள், எப்படியாக திடீர் விழ்ச்சியடைந்தது என்பதை யாவரும் மனம் திறந்து பேச, பார்க்க வேண்டும்.
கண்களை குற்றும் தமிழர்
இவற்றை சுருக்கமாக கூறுவதனால், முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் ஈழத் தமிழரிடையே, காணப்படும் ஒற்றுமையின்மையே முழுக்காரணமெனலாம். விபரமாக கூறுவதானால், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட புதிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகுவதற்கு முழுக்காரணமாக இருந்த தமிழர் விடுதலைக்  கூட்டணியினரும், கிழக்கில் புதிதாக உதயமான தமிழ் மக்கள் விடுதலை புலிகளுமே காரணிகள்.
தமிழர் விடுதலைக்  கூட்டணியினரும், கிழக்கில் உதயமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே உருவானவர்கள்.
ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு பின்னர், வடக்கில் உருவான தமிழ் கட்சி, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிட்டு விட்டார்களென்ற நொண்டி காரணத்தை கூறி, 2010ம் ஆண்டிலே உருவானவர்கள்.
ஆனால் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் 5 உறுப்பினர்கள், யாழ் மாவாட்டத்தில் தெரிவானார்கள். தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை முன்வைத்து யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட புதிய தமிழ் கட்சி, இரு மாவட்டங்களிலும் மொத்தமாக 7,544 வாக்குகள் மட்டுமே பெற்றனர். அதாவது, திருகோணமலை மாவட்டத்தில் 1,182 வாக்குகளையும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6,362 வாக்குகள்.
அப்படியானால், உடன் உதயமாகும் கேள்வி என்னவெனில், தமிழர் தாயக பூமியில் வாழும் மக்கள், தமக்கு சுயநிர்ணய உரிமை தேவையில்லையென கூறுகிறார்களா? நிச்சயமாக இல்லை! அவ் மக்கள் கூறும் செய்தி, முதிர்ச்சி இராஜதந்திரமற்ற பித்தலாட்ட அரசியலை தாம் ஏற்கவில்லையென்பதே.
இதே இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், திரு சம்பந்தனுக்கு கிடைக்கவிருந்த வாக்குகளை பிரிப்பதற்காகவே இவ் புதிய தமிழ் கட்சியினர் திருகோணமலையில் போட்டியிட்டார்கள் என்பதை யாவரும் அறிவார்கள். அப்படியானால் இக்கட்சியினர்  தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளில் உண்மையில் அக்கறை கொண்டவர்களா? அல்லது மற்றவர்களை பழிவாங்கும் நோக்கம் கொண்டவர்களா?  என்ற கேள்வி இங்கு உருவாகிறது.
முன்பு வேறு ஒரு கட்டுரையில் கூறியது போன்று, இவர்கள், “சிங்களவர் தேர்தலில் வென்றாலும் பரவாயில்லை, திரு சம்பந்தனுக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளை குழப்பினால் சரி” என்ற குறுகிய மனப்பான்மை இங்கு தெளிவாகிறது.
இவ் குழப்பவாதிகள், 13ம் திருத்தச் சட்டம், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை யார் யார் அன்று எதிர்த்தார்கள் என்று பட்டியலிடுவதற்கு மேலாக, முதலில் அவ்வேளையில் தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கின் நிலையையும், பலத்தையும், தற்போதைய நிலைமை பலத்துடன் ஒப்பீடு செய்து பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் விரும்பினால், மக்கள் முன்னிலையில், இவ்விடயமாக இரு நிபந்தனையின் அடிப்படையில் விவாதிக்கவோ, சம்பாசிக்கவோ தயாராகவுள்ளேன். இரு நிபந்தனைகள் ஆவன – ஒன்று, சமமான நேரம் கொடுக்கப்படவேண்டும், அத்துடன், விடயங்களை கூறும் வேளையில், இடையூறு செய்யவோ, இடைநிறுத்தி வேறு விடயங்களை கதைக்கவோ கூடாது.
புதிதாக உருவான தமிழ் கட்சிகள், உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும், தமிழ் மக்களிடையே பிரிவுகளை உண்டுபண்ணுவதையும், சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்த கருத்துகளின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்த்து, வேறு எதை இன்றுவரை சாதித்துள்ளனர்?
ஊன்றுகோல் யாருக்கு தேவை?
இந் நிலையில், தமிழர் தாயக பூமியில் 7,544 வாக்குகளை மட்டுமே பெற்ற புதிய தமிழ் கட்சியுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிக்கு சமனாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? இவர்கள் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேரம்பேசுவதை அனுமதிக்க வேண்டுமா? பொல்லு (ஊன்றுகோல்) யாருக்கு தேவைப்படுகிறது? நொண்டிக்கு பொல்லு தேவையா? அல்லாது பொல்லுக்கு நொண்டி தேவையா? என்பதை சமரச முயறசியில் ஈடுபடுவோர் சிந்திக்க வேண்டும்!
1983ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி சிறிலங்காவின் அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட, 6வது திருத்தச் சட்டத்திற்கமைய, இலங்கைத்தீவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும், தமிழீழ கோரிக்கையை முன்வைக்க முடியாது. அப்படியானால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், மாகாண சபையினால் எந்த பிரயோசனமும் இல்லையென்றும், இவ் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமென கூறுவதன் மர்மம் என்ன? இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு பகுதியா? அல்லது, “எட்டா பழம் புளிக்கும்“ என்ற கதையா?
முதிர்ச்சி இராஜதந்திரமுள்ள எந்த தமிழ் அரசியல்வாதியாக இருந்தாலும், 13வது திருத்தச் சட்டம் மூலம் மேலும் மாகாண சபையின் அதிகாரங்களை சிறிலங்கா அரசு குறைத்து, ஓர் வலுவற்ற அந்தஸ்தை உருவாக்கினாலும், அரசு கூறியதுபோல் இந்த வருடம், வடமாகாணசபை தேர்தல் நடைபெறுமானால், நிச்சயம் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்ற வேண்டும். இதன் மூலமே அழிந்து வரும் எமது தாயக பூமியை காப்பாற்றுவதுடன், சர்வதேச சமுதாயத்திற்கு தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசை என்ன என்பதை மீண்டும் வலியுறுத்த முடியும்.
அதிகாரம் எதுவும் இல்லாத மாகாணசபை தேர்தலில் தமிழர் ஏன் போட்டியிட வேண்டுமென கூறுபவர்கள், கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, சிங்கள பெரும்பான்மை கொண்ட பாராளுமன்றத்தில் வடக்கு கிழக்கிலிருந்து பாராளுமன்றம் சென்று தமிழ் உறுப்பினர்களுக்கு, அங்கு என்ன உரிமை இருந்தது, இப் பாராளுமன்றத்தில் இவர்கள் என்னத்தை சாதித்தார்கள், சாதிக்க முடியுமென்பதை மக்களுக்கு கூற முடியுமா?
ஆகையால் தமிழ் உறுப்பினர்கள் சிறிலங்கா பாராளுமன்றத்திற்கு எதற்காக சென்றார்களோ, அதே போன்றது தான், வடக்கு கிழக்கு மாகாணசபைகளின் நிலைகளும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வடமாகாண சபை தேர்தல் நடைபெற்றால், இதை சிங்களக் கட்சிகளுடன் கூட்டமைப்பபை கொண்ட தமிழ் கட்சிகளோ அல்லது சிங்களக் கட்சிகளோ கைப்பற்றுமானால், இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகள் மிகவும் மோசமானவையாகவே அமையும்.
இவ் வடமாகாண சபை தேர்தல் முடிவுகளை உதாரணம் காட்டி, சிறிலங்கா அரசு, உலகிற்கு செய்யவிருக்கும் பிரசாரங்களுக்கு தமிழர் துணை போவதா?
இவ் வடமாகாணச் சபை தேர்தல் பற்றி, சிறிலங்கா அரசுசார்பு வங்குரோத்து தமிழ் அரசியல்வாதிகள் எனப்படுவோரினால் வெளியிடப்படும் அறிக்கைகளை பொருட்படுத்தது, வடமாகாண சபைக்கான தேர்தல் நடக்கும் பட்சத்தில், இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியே ஆகவேண்டும்.
இல்லையேல் அரசு உலகிற்கு, வடமாகாண மக்கள் எமக்கு பெரும் ஆதரைவை தந்துள்ளார்களென கூறி, கிழக்கில் நடைபெற்றது போன்று, வடமாகாணத்தில் மாபெரும் சிங்களக் குடியேற்றம், பௌத்தமயம், இராணுவமயம் ஆகியவை எந்த தடையுமின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.
விடுதலை போராட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின், உரையிலிருந்து சில:
சுதுமலை பிரகடனம்:
‘‘இந்தியாவின் முயற்சியுடன் ஒத்துப்போவதை தவிர எமக்கு வேறுவழியில்லை….. ’’ (இவ்வுரையை முழுதாக படிக்க விரும்பியோர், 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி, சுதுமலை பிரகடனத்தை பார்க்கவும்)
2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர்தின உரையிலிருந்து:
‘‘உலக போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே…… ஒரு வலுவான சமாதான அடித்தளத்தில் நிலையூன்றி நின்றவாறு, படிப்படியாக, கட்டம் கட்டமாக, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தபடி பேச்சுக்களை முன்நகர்த்திச் செல்வதே சாலச் சிறந்தது….. உள்ளான சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன் வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்தை சாதகமாக பரிசீலனை செய்வோம்……. காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை’’ (இவ்வுரையை முழுதாக படிக்க விரும்பியோர், 2002ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி மாவீரர்தின உரையை பார்க்கவும்)
2008ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி மாவீரர் தின உரையிலிருந்து:
‘‘சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்புவரை சதாதுன்பச் சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது….. உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம். எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்………… இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம். இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக் குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன……. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்துவருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்…… அன்று இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகு முறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன……. இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது……. ’’ (இவ்வுரையை முழுதாக படிக்க விரும்பியோர், 2008ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி மாவீரர்தின உரையை பார்க்கவும்)
நவீன பெயர் வழிகள்
மேற்கூறப்பட்ட விடயங்களை, இங்கு கூறித்தான் தமிழர் தமது மனதில் கொள்ளவேண்டிய அவசியமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளினாலும், தலைவர் பிரபாகரனினாலும,; முன்பு வெளியிட்ட உரைகள், அறிக்கைகளுக்கும் – சுயநலம் கொண்ட சில அரசியல்வாதிகளும், புலம்பெயர் தேசங்களில் உள்ள சில ஊடகங்களும், ஊடகவியலாளர்களும், ஆய்வாளரென தம்மை கூறிக்கொள்வோரும (நவீன பெயர் வழிகள்), தற்பொழுது புதிய விளக்கங்களையும், வியாக்கியானங்களையும் தாம் நினைத்தவாறு, தமது தேவைக்கேற்ப கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது நன்றாக திட்டமிடப்பட்ட நாசகார செயல்!
உதாரணத்திற்கு, தேசியத் தலைவர் தனது 2008 மாவீரர்தின உரையில், இந்தியாவுடன் முறித்த உறவுகளை மீண்டும் பலப்படுத்துவோம் என கூறியதை, தற்பொழுது, இவர்கள்  தமது விதண்டாவாதங்களுக்காக, ஏதோ தேசியத் தலைவர் தமக்கு தொலைபேசியில் இரகசியமாக அதற்கான விளக்கங்களை முன்பு கூறியது போன்று, கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், இவர்கள் தேசியத் தலைவர் பொய் கூறுபவர் அல்லது சந்தர்ப்பவாதி போன்று காண்பிக்க முனைவது, மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் பிரபாகரன், வருடத்தில் ஒருமுறை ஆற்றும் மாவீரர்தின உரையின் அடிப்படையிலேயே, இயக்கத் தொண்டர்களது பணிகள் அமையும் என்பதை யாவரும் அறிவார்கள். இந்த விதிமுறைக்கும், நவீன பெயர் வழிகள், விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சில ஊடகங்கள் இத்துடன் நிறுத்தவில்லை! இவர்களுக்குள் உருவாகும் எண்ணங்கள், சிந்தனைகளை, தமிழீழ மக்களது விருப்பு வெறுப்பாக பிரகடனம் செய்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் நடந்து முடிந்த நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சையுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினைகள், பிரிவுகள், புலம்பெயர் தேசங்களில் பல புதிய அமைப்புக்கள் உருவாகவும், அவற்றை தொடர்ந்து புலம்பெயர் தேசங்களில் நடாத்தப்பட்ட இரு தேர்தல்கள், இரு மாவீரர் தினங்கள், விளையாட்டு போட்டிகள் என்பவை, ஒன்றுபட்டிருந்த புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களை, பகைமைக்கு உள்ளாக்கியுள்ளது.
இச் செயற்பாடுகளின் பின்னணியில், புலம்பெயர் தேசங்களில்  2003ம், 2004ம் ஆண்டு பகுதிகளில் பதவியிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களின் பங்கு, பெரிதளவில் உள்ளது என்பதை உலகறியும். இவர்கள், புலம்பெயர் தேசங்களில் மக்களிடையே ஓர் குழப்பமான நிலையை மிக வெற்றிகரமாக உருவாக்கிவிட்டனர்.
அதேவேளை, போராட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இணைய தளங்கள், பத்திரிகை யாவும், தற்பொழுது அவற்றை நடத்தியவர்களது சொந்த பாவனைக்கு ஏற்றவாறு நடாத்தப்படுகிறது. இவற்றின் மூலம், பலருக்கு தாராளமாக துரோகிப் பட்டங்கள்  தமிழீழ விடுதலைப் புலிகளினால் உத்தியோகபூர்வமாக சூட்டப்பட்டது போல் காண்பிக்கப்படுகிறது.
மிக கட்டுப்பாடான அமைப்பு
அண்மைக் காலங்களில், சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்திலிருந்து தப்பி மேற்கு நாடுகளிற்கு வந்த சிலர், கஷ்டங்களை எதிர்கொண்ட வேளைகளில், அவர்களுக்கு சில உதவிகளை செய்து கொடுத்த நவீன பெயர் வழிகள், அவர்களையும் தமது மக்களை குழப்பும் வேலைத்திட்டங்களுக்குள் இணைத்துக் கொண்டார்கள்.
மிக கட்டுப்பாட்டுடன் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளினால் – 2008, 2009ம் ஆண்டுகளில் புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள், சந்திப்புக்களை, ஐரோப்பாவில் வெளியாகும் ஒரு பத்திரிகை, தனது விளம்பர வியாபாரத்திற்காக, அம்புலிமாமா கதைகள் போல், தொடர்கதையாக புனைபெயருடன் எழுதியுள்ளது. இதன் மூலம் இப்பத்திரிகை தமிழ்மக்களுக்கு கூறும் செய்தி என்ன? இதைப் போன்ற மாபெரும் இழிவான செயலை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேறு யார் செய்வார்கள்?
இவ்விடயங்களை வெளியிட்ட பத்திரிகை நிர்வாகத்திடம், இவற்றை யாருடைய அனுமதியுடன் பிரசுரிக்கிறீர்களென வினாவியதற்காக, ஒரு சில்லறை மோசடி வியாபாரியுடன் சோடி சேர்க்கப்பட்டு, மேற்கூறப்பட்ட இணைய தளத்தில் இம்சிக்கப்பட்டேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் என்பவர்கள், ஊடக தர்மத்துடன் சரித்திரம், நீதி, நியாயத்தை ஒழுங்காக அறிந்திருக்க வேண்டும். ஒரு மணித்தியாலம் நடைபெறும் சம்பாசணையில், ஊடகவியலாளர் மூன்றில் இரண்டு நிமிடமும், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் மூன்றில் ஒரு நிமிடமும் கதைப்பதோ, அல்லது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர், ஊடகவியலாளரின் கருத்தை ஏற்காது, எதிர்மாறான கருத்துக்களை கூறும் வேளையில், அவற்றை தட்டிக்கழித்து, ஒரு பக்கமாக நிகழ்ச்சி நடத்துவதும், தமது கருத்துக்களுக்கு சாதகமானவர் நிகழ்ச்சிக்கு தோன்றும் வேளையில் அவர்களுக்கு உசார் ஏற்றுவதோ, நிச்சயம் ஊடக தர்மமாக இருக்க முடியாது.
மிக கட்டுப்பாடாக திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளது பெயரை, புலம்பெயர் நாடுகளில் தாம் விரும்பியவாறு பாவித்து, பதிவுகள் செய்வதோ, அறிக்கைகள் விடுவதோ வரவேற்கத்தக்க விடயங்கள் அல்ல. இப்படியாக நடப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் மட்டுமல்லாது, கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
உலக நாடுகளில் நடைபெறும் மற்றைய விடுதலைப் போராட்டங்களுடன் நாம் தோழமையாக இருப்பது நல்லது. ஆனால் எமது இராஜதந்திரப் போராட்டத்திற்கு வரவிருக்கு ஒரு சில நன்மைகளை குழப்பும் வகையில், இவ்விடயத்தில் செயற்படுவோமானால், நிச்சயம் எமது கண்முன்னே, எமது தாயகபூமி பறிபோவதையும், அங்கு வாழும் எமது மக்கள் சிங்கள மயமாக்கப்படுவதையும் நாம் காண நேரிடும்!
தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டிநின்ற புலம்பெயர் வாழ் மக்களும், செயற்பாட்டாளர்கள், இன்று எமது தாயக பூமியையும், அங்கு வாழும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய அவல நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
ஆகையால், மேலும் தாமதிக்காது, யார் குத்தினாலும் அரிசியானால் போதும் என்ற நிலைப்பாட்டில், யாவரும் கூடியளவு ஒன்றுபட்டு, (நிச்சயமாக நூறுவீதம் ஒன்றுபடுவது முடியாத காரியம்) எமக்குள்ள தற்போதைய தார்மீக பணியை நிறைவேற்றுவோம்.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
25 மே 2013
tchrfrance@hotmail.com

ad

ad