மத்திய காங்கிரஸ் அரசை தூக்கியெறிய வேண்டும்! காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பேச்சு!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கினார். காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை
ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை சூறையாடிய மத்திய காங்கிரஸ் அரசை தூக்கியெறி வேண்டும். குடும்ப ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விஷம்போல் விலைவாசி ஏற்றம் அடைந்துள்ளது.
திமுகவுக்கும், காங்கிரசுக்கும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இந்தியாவை காக்கும் தேர்தலாக வரும் நாடாளுமன்ற தேர்தல் விளங்க வேண்டும். பாதுகாப்புத்துறையில் மத்திய அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை. இந்தியாவை பாதுகாக்க பாதுகாப்புத்துறையும், முப்படைகளும் வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினை நவீன மயமாக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. கடந்த 10 ஆண்டுகளை மத்திய அரசு வீணடித்துவிட்டது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே மத்திய காங்கிரஸ் அரசின் தாரகமந்திரம்.
ஈழத்தமிழர்கள் அழிந்துபோக மத்திய அரசு காரணமாக இருந்தது. தனி ஈழம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பினோம். மத்திய அரசுக்கு அனுப்பிய தீர்மானங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மாநில அரசின் உரிமையில் தலையீடு, மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. மத்திய அரசு தமிழக மக்களுக்கும், மக்களுக்கும் எண்ணற்ற துரோகங்களை செய்துள்ளது.
மாநில அரசு மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. மீனவர் பிரச்சனை, காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தீர்வு காணவில்லை. மின்வெட்டு இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் திகழும். அஇஅதிமுக அங்கம் வகிக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்றார்.