சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளதால் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள சாலைகளில் திங்கள் கிழமை முழுவதும் வாகனங்களை ஓட்டக்கூடாது என மேயர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பாரிஸ் நகரில், வாகனங்களிலிருந்து வெளிப்படும் கரும்புகை மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்படும் மாசுபாடு காரணங்களால் நகரமே புகை மூட்டமாக காணப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, பாரிஸ் சாலைகளை பயன்படுத்தும் 50 சதவிகித வாகனங்களுக்கு நாளை(திங்கள் கிழமை)முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பாரிஸ் மேயர் Anne Hidalgo, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் புகைமூட்டத்தால் மக்கள் பெருமளவில் அவதிப்படுவதாக எழுந்த புகார்களால், அவசரகால அடிப்படையில் 50 சதவிகித வாகனங்கள் பாரிஸ் சாலைகளில் பயணிக்க தடை விதித்திருப்பதாக தெரிவித்தார்.
தவிர்க்க முடியாத பயணத்தை மேற்கொள்பவர்கள், முக்கிய சாலைகளை தவிர்த்து பாரிஸில் உள்ள தெருக்கள் வழியாக பயணிக்கலாம்.
இருப்பினும், மருத்துவ அவசர வாகனங்கள், ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள், மின்சாரத்தில் இயங்கும் கார்கள் மற்றும் டேக்ஸி வாகனங்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று காற்றின் தரத்தை பரிசோதித்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், காற்றில் அபாயகரமான நுண்துகள்கள் அதிக அளவில் கலந்திருப்பதை கண்டுபிடித்ததால், இந்த அவசர தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் இந்த நுண்துகள்களை சுவாசித்தால், அது நேரடியாக நுரையீரல்களை பாதித்து புற்றுநோயை உண்டாக்கி விடும்.
ஒவ்வொரு கன மீற்றர்களுக்கும் நுண்துகள்களின் அளவு 80 மைக்ரோகிராம்கள்(80 microgrammes) இருந்தால் மட்டுமே பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும். தற்போது, இந்த அளவு அதிகரித்துள்ளதால் வாகன தடையை பாரிஸ் மேயர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
|