ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மிகுந்த அக்கறையுடன் மீண்டும் ஒருமுறை தங்களிடம் மேலும் தாமதிக்காமல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை மிகக்கவனமாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்கவும். நான் இதைக்கேட்பதற்கு எனக்கு அதிகாரமில்லை.
வேறு எவராலும் இவ்வாறு அதிகாரம் எனக்கு வழங்கப்படவுமில்லை. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரினதும் நலனை கருத்திற்கொண்டு நாட்டையும், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளையும் காப்பாற்றக்கூடிய ஓர் இடைக்கால தீர்வை நானாக தங்களிடம் முன்வைக்க தள்ளப்பட்டுள்ளேன்.
தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்ற ஓர் இடைக்கால தீர்வாக அரசியல் கைதிகள் அனைவரையும் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி பின்பு இறுதி முடிவை எடுக்கலாம் என்று தங்களை விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.
சிறைச்சாலைகளில் அநேகமான கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தங்களுக்கு மட்டுமே சங்கடத்தை தோற்றுவித்துள்ளதே அன்றி வேறு எவருக்கும் அல்ல.
ஆகவே இந்த விடயத்தில் தீர்மானத்தை மேற்கொள்ளக்கூடியவர் தாங்கள் மட்டுமே. 1952ம் ஆண்டு நடந்த நாடு தழுவிய ஹர்த்தால் பின்பு டட்லி சேனநாயக்கா அரசுக்கு என்ன நடந்தது என்பது பற்றி நான் தங்களுக்கு விபரமாக எடுத்துக்கூறத் தேவையில்லை.
அப்போதைய அந்த அரசு தானாக கலையவில்லை. ஆனால் கௌரவ டட்லி சேனநாயக்கா அவர்கள் வேறு யார் மீதும் பழியை சுமத்தாது தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
எனக்கு நன்றாக ஒரு விடயம் ஞாபகத்தில் உள்ளது யாதெனில் அன்று அவர் தானாக ராஜினாமா செய்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் அவரது இச்செயல் நற்பெயரை பெற்றுக்கொடுத்தது.
நான் தங்களிடம் மிகவும் வேண்டிக்கொள்வது அவ்வாறானதொரு நிலைமையை உருவாவதற்கான நிலைமை ஏற்படக்கூடாதென்பதே. சில உள்ளுர் தினசரி பத்திரிகைகளில் கண்டி வைத்தியசாலையில் கைதிகள் சிலரின் நிலைமை கவலைக்குரியதாகவும்,
தும்புரவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிக மோசமாக இருக்கிறதென்றும் அவர்களில் 13 பேர் வைத்திய வசதியை நிராகரித்துள்ளதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
மேலும் சில வைத்தியசாலைகளில் இருந்து இவ்வாறான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி அவர்களே, மீண்டும் தங்களிடம் வற்புறுத்தி கேட்டுக்கொள்வது இந்த விடயத்தில் ஓர் தீர்வை எடுக்கக்கூடியவர் தாங்கள் மட்டுமே. மேலும் இன்றைய சூழ்நிலையில் ஓர் இடைக்காலத் தீர்வாக புனர்வாழ்வை அளிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.