புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். இதனால் அணியின் ரன் ரேட் சீராக உயர்ந்தது.



இந்த ஜோடியில் தனது அரைசதத்தை பதிவு செய்த ரோகித் சர்மா 57(70) ரன்னில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட்கோலி, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். துவக்க வீரராக களமிறங்கி ஆஸ்திரேலிய பந்து வீச்சை பறக்கவிட்ட ஷிகர் தவான் தனது 16-வது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய ஷிகர் தவான் 109 பந்துகளில் 117 ரன்கள் குவித்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலியுடன் ஜோடி சேர ஆட்டம் சூடு பிடித்தது. அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 48(27) ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கி அதிரடி காட்டிய டோனி 27(14) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த விராட்கோலி 82(77) ரன்களில் கேட்ச் ஆனார்

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 352 ரன்களை எடுத்தது. முடிவில் லோகேஷ் ராகுல் 11(3) ரன்களுடனும், கேதர் ஜாதவ் ரன் எதுவும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கவுல்டர்-நிலே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் சார்பில், டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறந்த துவக்கம் தந்த இந்த ஜோடியில் ஆரோன் பிஞ்ச் 36(35) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக டேவிட் வார்னருடன், ஸ்டிவன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் டேவிட் வார்னர் தனது அரைசதத்தினை பதிவு செய்திருந்தநிலையில் 56(84) ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில் 42(39) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஸ்டிவன் ஸ்மித்துடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிவன் ஸ்மித் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை அதிரடியாக உயர்த்தி வந்தபோது ஸ்டிவன் ஸ்மித் 69(70) ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அதிரடி காட்டி வந்த மேக்ஸ்வெல் 28(14) ரன்களும், கவுல்டர்-நிலே 4(9) ரன்களும், பேட் கம்மின்ஸ் 8(7) ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 3(3) ரன்களும், ஆடம் சாம்பா 1(3) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் வீழ்ந்து கொண்டிருந்த போதிலும் அதிரடியாக ரன் சேர்த்த அலெக்ஸ் கேரி 25 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் அலெக்ஸ் கேரி 55(35) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ஆஸ்திரேலியா அணி 50 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்படி உலக கோப்பை ஆட்டதில் தங்களது இரண்டாவது வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது

ad

ad