புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2019

எமக்கு தேவையானதை மத்தியில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது!- மைத்திரிக்கு விக்கி பதிலடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி :- 13வது அரசியல் திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப் பகிர்வு வடக்குக்குப்போதும் என்று எமது நாட்டின் ஜனாதிபதி இந்திய ஊடகவியலாளர்களிடம் அண்மையில் கூறியுள்ளார். அது பற்றி உஙகள் கருத்து என்ன?

பதில்: “அதைத் தீர்மானிப்பது அவர் அல்ல. எமது மக்களே! அவரைப் பதவிக்குக் கொண்டுவர நாங்கள் 2014ல்இ 2015ல் பாடுபட்டது அவர் எங்களுடன் சேர்ந்து பேசி எமது அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவார் என்று தான். எம்முடன் பேசித்தான் இந்த முடிவை எடுத்தாரா அல்லது அடிவருடிகளின் பேச்சைக் கேட்டு இவ்வாறு கூறியுள்ளாரா?

13வது திருத்தச் சட்டம் 1987ல் வரும் போதே இரு நாட்டாரும் இணங்கிக் கொண்ட பல விடயங்களை அப்போதைய இலங்கை அரசாங்கம் முக்கியமாக ஜனாதிபதி ஜயவர்தன எமது நாட்டிற்குள் வர விடவில்லை. அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தனாவைத் தெரிந்த எனது நண்பர் ஒருவர் “நரியின் மறுபிறப்பு” என்று அவரை வர்ணிப்பார்.“20ம் நூற்றாண்டின் நரி” (20th Century Fox) என்று வெளிப்படையாகவே அக்காலத்தில் அவர் அழைக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட இந்தியாவின் மாகாண அரசுகளின் அதிகாரங்கள் இலங்கையின் வடகிழக்கு மாகாண சபைக்கு வழங்க வேண்டும் என்றே அப்போதைய கருத்துப்பரிமாற்றத்தின் போது முடிவு எடுக்கப்பட்டது.அதுநடக்கவில்லை. அதனால்தான் 28.10.87ம் திகதியன்று தமிழ்த்தலைவர்கள் திருவாளர்கள் அமர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு “எமக்குத் தருவதாகக் கூறிய அதிகாரங்கள் தரப்படவில்லை” என்ற பாணியில் ஒருமித்து கடித மொன்றை எழுதி இருந்தார்கள்.

ராஜீவால் கிழவருடன் போட்டி போட முடியவில்லை. “இப்போது கிடைப்பதை எடுப்போம் பின்னர் பார்ப்போம்” என்று இருந்து விட்டார் ராஜீவ்காந்தி அவர்கள்.ஆகவே ஜனாதிபதி சிறிசேன கூறுவது போல் அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை. 13வது திருத்தச்சட்டத்தை ஒன்பது மாகாணங்களுக்கும் ஏற்புடைத்தாக்கியமையால் எமக்கெனக் கிடைக்கவிருந்த அதிகாரப் பகிர்வு கடைத்தெருவுக்கு இழுத்து வரப்பட்டு “அடுத்தமாகாணம் அதைக் கேட்க வில்லை, நீயேன் கேட்கிறாய்?” போன்ற கேள்விகளால் எம்மவரின் குரல்கள் அடக்கப்பட்டன.

பேராசிரியர் பீரிஸ் அவர்கள் (அவர் மீது எங்களுக்கு மரியாதை இருந்த காலத்தில்) கூறினார் -“ஒரு கையால் தந்து மறுகையால் திரும்ப வாங்கும் சட்டமே 13வது திருத்தச்சட்டம்” என்று.

முன்னைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒருவர் கூறினார் “இந்தச் சட்டத்தின் கீழ் மலசலகூடம் கழுவுபவரைக் கூட நியமிக்க எனக்கு உரித்தில்லை” என்று.இவற்றிற்கு மேலதிகமாக வேறு சில முக்கியமான விடயங்களை ஜனாதிபதி மறந்து விட்டார் போல் தெரிகின்றது.

சில வருடங்களுக்கு முன் அனுராதபுரத்தில் என்னையும் உள்ளடக்கிய ஒன்பது முதலமைச்சர்களும் அவரைச் சந்தித்தபோது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் குறைபாடுகள் பற்றி விலாவாரியாக அவருக்கு எமது முதலமைச்சர்கள் அனைவராலும் தெரிவிக்கப்பட்டது.அவரது ஆதரவாளர் ஆகிய கௌரவ பேஷல ஜயரட்ன (அப்போதைய வடமத்திய மாகாண முதலமைச்சர்) “ஒரு மாகாணத்தை ஆளும் சகல அதிகாரங்களும் எமக்கு வழங்கப்பட வேண்டும். இதுவரையில் அவ்வாறு வழங்கப்படவில்லை. மத்தியின் உள்ளீடலே அதிகம். ஆனால் சமஷ்டி வேண்டாம்” என்றார்.

அதுபற்றிப் பார்ப்பதாகக் கூறினார் ஜனாதிபதி. குடிகாரன் பேச்சுப் போல் அது மறக்கப்பட்டுவிட்டது. பேஷலவுக்கு நான் பின்னர் கூறினேன் “சமஷ்டி இல்லாமல் உங்களுக்குத் தரப்படும் மாகாண உரித்துக்களை எவ்வாறு நிரந்தரமாக்கப் போகின்றீர்கள்? தரப்படுவனவற்றை ஒற்றையாட்சியின் கீழ் திரும்பப் பெறலாமே?” என்றேன். அதற்கு அவர் “அதுபற்றி எனக்குத் தெரியாது. சமஷ்டி வேண்டாம். முழு அதிகாரப் பகிர்வும் வேண்டும்” என்றார். “சமஷ்டி என்ற சொல்லை உங்கள் தலைவர்கள் தகாத வார்த்தை ஆக்கி விட்டார்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டேன்.

13வது திருத்தச் சட்டத்தால் 1987ல் தந்தவற்றைப் பற்றி ஜனாதிபதி கூறுகிறார். அங்கு தரப்பட்ட எத்தனை அதிகாரங்கள் தற்போது இல்லை என்பது பற்றித் தெரியாமல் தான் அவ்வாறு கூறுகின்றாரா அல்லது தெரிந்தும் தமிழ் மக்களை வாங்க முடியும் என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியுள்ளாரா?

உதாரணத்திற்கு வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அவர் இன்றும் ஏற்கின்றாரா? அப்படியென்றால் எங்களிடம் கேட்காமல் திருகோணமலை துறைமுகத்தில் சிங்கள மக்களைப் பெருவாரியக இறக்க எத்தனிப்பது ஏன்?

மேலும் குறித்த சட்டம் மூலம் வடகிழக்கு இணைப்பு கிடைத்தது. சுமார் 18 வருடங்கள் அது எமது அரசியல் யாப்பில் இடம்பெற்றதன் பின்னர், (தன் ஒப்புதல்ப்படி) கட்சி அரசியல் ரீதியாக சிந்திக்கும் ஒரு பிரதம நீதியரசராலும் அவர் சொல் கேட்கும் நீதியரசர்களாலும் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது.சரியான முறையில் குறித்த இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா? இல்லை. மாறாக அவசர அவசரமாக வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்குமிடையில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி வந்தார்கள் அரசாங்கத்தினர்.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற கிராமங்களைச் சுற்றிய பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் இந்த நிமிடத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது இரு மாகாணங்களுக்கும் இடையில் சிங்களக் குடியேற்றங்களை இருத்தி விட்டுமத்தியில் சிங்களவர்கள் வாழ்கின்றார்களே வடக்கையும் கிழக்கையும் எவ்வாறு இணைப்பது என்று கேட்பதற்காக அவசர அவசரமாக ஜனாதிபதியின் ஆளுமைக்கு உட்பட்ட மகாவலி அதிகார சபையினதும், இராணுவத்தினரதும், வெலவெலத்துப் பயந்து போயிருக்கும் மாகாணத் தமிழ் அலுவலரதும் அனுசரணையின் பேரில் இது நடைபெற்று வருகின்றது.

தக்க கருத்து வெளியிட்டால் கரும்வேலக் காட்டிற்கு மாற்றி விடுவார்கள் என்ற பயம் இந்தத் தமிழ் அலுவலர்களுக்கு என்றும் இருந்து வருகின்றது போலும்!

அடுத்து 1992ல் அரச அதிபர், மாவட்டச் செயலர், கிராம சேவையாளர் போன்றவர்களின் மேல் இருந்த மாகாணங்களின் அதிகாரம் நீக்கப்பட்டது.அவர்கள் இப்பொழுது மத்தியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றார்கள். ஆகவே சமாந்திரமான இரண்டு அதிகார மையங்கள் மாகாண மட்டத்தில் ஆட்சியோட்சுவது அவருக்குத் தெரியாதா? மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் அற்ற அரசியல்வாதிகளைக் கொண்டு வந்து இணைத்தலைவர்கள் ஆக்கியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் என்பது மாகாண ரீதியாக முதலமைச்சரிடத்திலும் மத்தியின் சார்பாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் வசமே இருக்கின்றது. சட்டவாக்க உரிமை கொண்டவர்கள் சபையில் இருந்து பேச மட்டுமே முடியும். இணைத்தலைவர்கள் ஆக முடியாது அவர்களால்.

ஆனால் ஆக்கியுள்ளார் எமது கனம் பொருந்திய ஜனாதிபதி. பிரதம செயலாளர் மாகாணப் பொதுச் சேவை அலுவலர் சேவைக்குள் அடங்காது மத்தியின் கீழ் வருவது அவருக்குத் தெரியாதா?

எனக்குத் தேவையான ஒரு செயலாளரை எனது அமைச்சுக்கு நான் தேர்ந்தெடுக்க ஒரு வருடத்திற்கு மேலாகப் போராட வேண்டியிருந்தது. மத்திக்கும் மாகாண மட்ட அலுவலர்களுக்கும் இடையில் இருக்கும் நெருங்கிய உறவே இதற்குக் காரணம்.

மத்திக்கிருக்கும் அதிகாரத்தில் மதி மயங்கியவர்களே எமது மாகாண மட்ட அதிகாரிகள். அவ்வளவுக்கும் நான் கோரிய அலுவலர் முழு இலங்கை மட்டத்தில் நிர்வாக சேவைப் பரீட்சையில் 1984ல் சித்தி அடைந்த ஒருவர்.

வடமாகாணத்தில் இன்று இருக்கும் அத்தனை சிரேஷ்ட அலுவலர்களும் போதுமான அறிவிப்பு பரீட்சார்த்திகளுக்குக் கொடுக்காது 1991ல் அல்லது 1992ல் போரின் போது வைக்கப்பட்ட பரீட்சையில் மாகாண மட்டத்தில் சித்தி அடைந்து வந்தவர்களே.

மாகாணமட்டத்தில் இருக்கும் மத்தியின் அதிகாரங்களையும் செல்வாக்கையும் புரிய வைக்கவே இதைக் கூறுகின்றேன். பெருமளவில் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்திருக்கின்றோம் என்று கூறும்போது ஜனாதிபதி தனது நாக்கைக் கொடுப்புக்குள் மடித்து வைத்துக்கொண்டு கூறியிருக்க வேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலும் சாதாரண மக்களின் கோரிக்கை சிறந்த பொருளாதார நிலைமையே அன்றி அரச அதிகாரங்கள் அல்ல என்ற கருத்துப்பட ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை விட்டுள்ளது.

போரின் பின்னரான நிலையில் எமது மக்கள் அன்றாட தேவைகளுக்குத் திண்டாட வேண்டியுள்ளது என்பது உண்மை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம் போதிய முதலீடுகள் வராமை மறுபுறம் செய்வதாகக் கூறப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தாமதம் கடன் நிறுவனங்களின் கசப்பான காரியங்கள், இராணுவத்தினரின் உள்ளீடுகள் என்று பலதாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அல்லது பாதிக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

“தரவேண்டியதைத் தராது வைத்து தாமதித்துத் தந்தால் தரங்கெட்ட மக்கள் மறந்து விடுவார்கள் தமது உரிமைகளை” என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இவ்வாறு கூறினாரோ தெரியவில்லை.

எமது மக்களுக்கு வேண்டியிருந்தது பொருளாதார அபிவிருத்தியே அன்றி அரசியல் ரீதியான அதிகாரங்கள்அன்று என்று ஜனாதிபதி கூறும்போது 2013 செப்ரெம்பரில் வடமாகாண முதலமைச்சராகப் போட்டி இட்டவருக்கு எவ்வாறு 133,000க்கு மேற்பட்ட மக்கள் வாக்குகள் கிடைத்தன என்று சிந்திக்க வேண்டும்.

அப்போது ஜனாதிபதி அக்காலத்தைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்தவர். ஜனாதிபதி மகிந்த எவ்வாறான பொருளாதார குறையகற்றும் ஈகையில் ஈடுபட்டிருந்தார் என்று அவருக்குந் தெரிந்திருந்தது. இராணுவத்தினர் ஊடாக அள்ளி அள்ளிக் கொடுத்தாரே மகிந்த!

ஏன் மக்கள் அவரின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை? மக்களுக்குத் தேவைகள் இருப்பது உண்மை தான். ஆனால் எமது தமிழ் மக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டு அதிகாரங்களைப் பகிராமல் இருக்க முடியும் என்று ஜனாதிபதி நினைத்தால் அவரின் அரசியல் அறிவு பற்றி சந்தேகம் எழுவது இயல்பே.

இப்பொழுதும் நான் என் மக்களுக்குக் கூறுவது அரசாங்கம் தரும் கொடைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பொருளாதார சலுகைகளை தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தேர்தல் என்று வந்தால் உங்கள் உரிமைகளுக்காகப் போராட முன்னிற்பவர்களுக்கே வாக்கு அளியுங்கள் என்று.

அப்போது அவர்கள் “எங்கள் வாக்கைப் பண்டமாற்றாகக்கோரியே கொடைகள் தரப்பட்டன. வாக்களிக்காவிடில் அது துரோகம் அல்லவர்?” என்று கேட்பார்கள். அதற்கு நான் கூறுவது “அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்த தமிழ் மக்களும் போரின் போது உங்களுக்குஏற்படுத்திய அழிவுகளுக்கும், அல்லல்களுக்கும், அவலங்களுக்கும் கோடி கோடியாக நட்டஈடு உங்களுக்குத் தர வேண்டும்.

தமிழ் மக்களின் நேர்மையான, நியாயமான அரசியல் கோரிக்கைகளை உதாசீனம் செய்தே உங்கள் அனைவரையும் இவ்வாறான இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்கள். இப்போது வாக்குக் கேட்டு கொடைகள் தருவது எவ்வாறு நியாயமாகும்? எவ்வாறு அறமாகும்? பிள்ளையையுங் கிள்ளித்தொட்டிலையும் ஆட்டப் பார்க்கின்றார்கள் அல்லவா? உங்களுக்குரிய நட்ட ஈட்டைகூடுமானவரை வருத்தி அரசாங்கத்திடம் இருந்தும் அரச அடிவருடிகளிடம் இருந்தும் இவ்வாறான கொடைகள் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

அவர்கள் உங்கள் கடனையே திருப்பி அடைக்கின்றார்கள். உங்களுக்கென்று எதையும் புதிதாகச் செய்ய முன்வரவில்லை. உங்களை நீங்களே ஆள சட்டத்தில் இடமளிக்கவில்லை.

உங்களுக்குத் தேவையான அரசியல், பொருளாதார, கல்வி, சமூக புனரமைப்புக்களை உங்களைக் கேட்டு சட்டப்படி நகர்த்த முன்வரவில்லை.

அவர்கள் தருவதை அவர்களிடம் இருந்து எடுத்து விட்டு தமிழர்தம் உரிமைகளுக்காகப் போராடும் தகுந்தவர்களுக்கு வாக்களிப்பது பிழையல்ல” என்று கூறுவேன்.ஆனால் அண்மைக் காலங்களில் தகுந்தவர்கள் என்று நாம் நம்பியவர்கள் கூட தரங்கெட்டவர்களாக மாறி வருவது தமிழர்தம் தலைவிதி. அதை விரைவில் மாற்றி அமைப்போம்.

இவ்வாறான பொருளாதார நிலைமை சீர்திருத்தத்தை எம் மக்கள் தமக்கெனத்தாமே தீர்மானித்து செய்ய வேண்டுமே ஒளிய மத்தியில் உள்ளோர் “இவர்களுக்குத் தேவை இதுதான்” என்று தாமே முடிவெடுத்து செய்வதற்கு நாம் ஒன்றும் அவர்தம் இனத்தையோ, மதத்தையோ, மாகாணத்தையோ சார்ந்தவர்கள் அல்ல.

நாம் தமிழர்கள். நாம் கிறீஸ்தவர்கள், முஸ்லீம்கள், இந்துக்கள். எமக்கென ஒரு பாரம்பரியம் உண்டு. தாயகம் உண்டு, தனித்துவம் உண்டு.அவற்றை மதித்து, மறுதளிக்காமல், மயக்க வார்த்தைகளைப் பாவிக்காமல் உரிய உரித்துக்கள் மூலம் தந்தாலன்றி மக்கள் மீண்டும் மீண்டும் தருவதை எடுத்துக் கொண்டு தம்மைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய தமிழ் பிரதிநிதிகளுக்கே வாக்களிப்பர் எங்கள் மக்கள்.

இதனால் நான் என் நண்பர்கள் டக்ளஸ் தேவானந்தா, தம்பி அங்கஜன், திருமதி மகேஸ்வரன் போன்றவர்களைக் குறை கூறவரவில்லை. அவர்களால் போகக் கூடிய மட்டம் பொருளாதார அபிவிருத்தி பெறுவது வரைக்கும் மட்டுமே என்று கூற வருகின்றேன்.



அவற்றை எடுத்துக் கொடுங்கள் எம் மக்களுக்குஎன்று தான் நான் அவர்களுக்குக் கூறுவேன். ஆனால் எமது மக்கள் தமது நிரந்தர தேவையை உணர்ந்துள்ளார்கள். அதுதான் முற்றுமுழுதான வடகிழக்கு இணைந்த சகல மட்ட அதிகாரப்பரவல்! 13வது திருத்தச் சட்டமல்ல.”

ad

ad