தரம் மூன்று அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தநிலையில் பாடசாலையில் தொடர்ந்தும் ஆசிரியர்களாகவும், பணியாளர்களாகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோமென நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய கல்லூரியில் நடைபெற்ற இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க கூட்டமொன்றில் அதிபர் சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த 398 புதிய அதிபர்களுக்கும் நியமனம் வழங்கப்படுகின்ற திகதி ஒரே திகதியாக இருக்க வேண்டும். சென்ற வாரம் வழங்கப்பட்ட 90 நியமனங்களும் சட்ட வலுவற்றது. மத்திய கல்வி அமைச்சு அதனை அனுமதி க்கவில்லை. 90 பேருக்கு மட்டுமான அதிபர் நியமனம் எங்களுக்குள் முரண்பாடுகளை தோற்றியிருக்கிறது. இதனால் நிர்வாக த்துடன் சண்டை பிடிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்து விட்டு பாடசாலையில் ஆசிரியர்களாகவும், பணியாளர்களாகவும் கடமையாற்றிக் கொண்டிருப்பதனால் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றோம். எமக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளமே வழங்கப்படுகின்றது. எங்கள் நியமனத் திகதிகள் ஒரே நேரத்திலிருக்க வேண்டும். பொறுப்பேற்கும் திகதியும் கூட ஒரே திகதியாகவே இருக்க வேண்டும்.
எங்களுடைய நியமனங்கள் காலதாமதமானதற்கு மத்திய கல்வி அமைச்சு எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை. யாழ் மாவட்டத்திலிருக்கின்ற வெற்றிடங்கள் நிரப்பப்பட்டதன் பின்னரே வெளி மாவட்ட பாடசாலைகள் வழங்கப்பட வேண்டும். போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற அதிபர்கள் சிலர் யாழ் மாவட்ட பாடசாலைகளில் பிரதி அதிபராகவும் உதவி அதிபர்களாகவும் கடமையாற்ற ஆர்வத்தோடு உள்ளனர்.
எம்மிடமுள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் ஒரு குழுவாக செயற்பட்டு வருகின்றோம். எமது பிரச்சினை களை வேறு யாரிடமும் கையளிக்க விரும்பாது நாமே கையாளுகின்றோம் சாதகமான பதில் கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.