அடேலையும் போர்க்குற்ற விசாரணை செய்யுங்கள்; பிரிட்டனுக்கு இலங்கை கோரிக்கை |
அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பேர் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அடேல் பாலசிங்கம் விடுதலைப் புலிகளுக்கும் உதவிகளை வழங்கியிருந்தார் என்றும் போராட்டத்திற்காக ஆட்சேர்ப்பு மற்றும் ஆறாயிரம் தமிழ் பெண்களை பயங்கரவாத செயற்படுகளில் ஈடுபடுத்தியமை தொடர்பில் அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இதற்கான பல சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.
இதேவேளை தற்கொலை குண்டு தாக்குதல்களை அங்கீகரித்து அவர் ஆற்றிய உரை அடங்கிய பதிவுகள் வன்னி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டிருந்தது.
ஆயினும் அடேல் பாலசிங்கம் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் சர்வதேச ரீதியாக தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பான நியாயங்களை சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கான பல வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இது தொடர்பில் கடிதங்களையும் அனுப்பியிருந்ததுடன் தனது கணவரான அன்ரன் பாலசிங்கத்துடன் இணைந்து ஈழவிடுதலைப் போராட்டத்தினையும் ஆவணமாகப் பதிவு செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறு அவர் பதிவு செய்யப்பட்டு வைத்திருந்த சில ஆவணங்களையே இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் அரசு கைப்பற்றி இருக்கலாம்.
|